பள்ளி நேரத்தில் அரசு பஸ் வசதி: மாணவிகளுக்கு உறுதி அளித்த நாமக்கல் எம்பி

மாணவிகளை சந்தித்து பேசிய மாதேஸ்வரன் எம்பி.
பழையபாளையம் அரசு பள்ளி மாணவிகளின் கோரிக்கையை, நாமக்கல் எம்.பி. மாதேஸ்வரன் கவனமுடன் கேட்டறிந்தார்
பள்ளி நேரத்தில் பழையபாளையம் பகுதிக்கு அரசு பஸ் இயக்கப்படும் என நாமக்கல் எம்.பி. மாதேஸ்வரன் உறுதியளித்ததால், மாணவிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
நாமக்கல் லோக்சபா தொகுதி எம்.பியாக வெற்றிபெற்று, பொறுப்பேற்றுள்ள கொமதேக தெற்கு மாவட்ட செயலாளர் மாதேஸ்வரன் கிராமம் கிராமமாக சுற்றுப்பயணம் செய்து, வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார். இந்த நிலையில், எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியம், சிவநாய்க்கன்பட்டி பகுதியில் அவர் பொதுமக்களை சந்தித்து நன்றி தெரிவித்துக்கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக தனியார் வாகனம் ஒன்றில், பழையபாளைம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு செல்வதற்காக மாணவிகள் வந்தனர்.
அவர்கள் எம்.பி. மாதேஸ்வரனைப் பார்த்ததும், வாகனத்தில் இருந்து இறங்கி வந்து வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் அந்த மாணவிகள், பழையபாளையத்திற்கு சென்றுவந்த அரசு பஸ் கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் அந்த பஸ் மீண்டும் இயக்கப்படவில்லை. அதனால் பழையபாளையம் அரசுப்பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகள் தினசரி தனியார் வாகனங்களில் பணம் கொடுத்து வர வேண்டி உள்ளதால் மிகவும் சிரமமாக உள்ளது. எனவே மீண்டும் பள்ளி நேரத்தில் அரசு பஸ் இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். மாணவிகளில் கோரிக்கையை கேட்டறிந்த எம்.பி. மாதேஸ்வரன் இதுகுறித்து, சம்மந்தந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் அரசு பஸ் இயக்க நடவடிக்கை எடுப்பதாக கூறினார். அதைத்தொடர்ந்து பள்ளி மாணவர்கள் மகிழ்ச்சியுடன் சென்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu