நாமக்கல் மாவட்டத்தில் குரூப் 4 போட்டித்தேர்வு எழுத உள்ள 51,433 பேர்

நாமக்கல் மாவட்டத்தில் குரூப் 4 போட்டித்தேர்வு எழுத உள்ள 51,433 பேர்
X

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில், நாமக்கல் கலெக்டர் உமா பேசினார்.

நாமக்கல் மாவட்டத்தில் 51,433 பேர் குரூப் 4 போட்டித்தேர்வு எழுத உள்ளனர். அவர்களுக்கு கலெக்டர் உமா அறிவுரை வழங்கினார்.

நாமக்கல் மாவட்டத்தில், 9ம் தேதி நடைபெறும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 போட்டித்தேர்வில், 174 மையங்களில் 51,433 தேர்வர்கள் தேர்வு எழுதுகின்றனர்.

நாமக்கல் மாவட்டத்தில் 9ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள டிஎன்பிஎஸ்சி குரூப் 4 போட்டித்தேர்வுக்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், அரசு மருத்துவக் கல்லூரி அரங்கில் நடைபெற்றது.இந்த கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் உமா தலைமை வகித்து பேசியதாவது:-

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 4 பணிக்கான போட்டித்தேர்வுகள், 9ம் தேதி காலை 9.30 க்கு தொடங்கி 12.45 மணி வரை நடைபெற உள்ளது. நாமக்கல் தாலுகாவில் அமைக்கப்பட்டுள்ள 39 தேர்வு மையங்களில் 2,073 தேர்வர்களும், மோகனூர் தாலுகாவில் 8 தேர்வு மையங்களில் 2,229 தேர்வர்களும், சேந்தமங்கலம் தாலுகாவில் 17 தேர்வு மையங்களில் 4,562 தேர்வர்களும், ராசிபுரம் தாலுகாவில் 44 தேர்வு மையங்களில் 13,355 தேர்வர்களும், பரமத்தி வேலூர் தாலுகாவில் 21 தேர்வு மையங்களில் 5,872 தேர்வர்களும், திருச்செங்கோடு தாலுகாவில் 35 தேர்வு மையங்களில் 10,405 தேர்வர்களும், குமாரபாளையம் தாலுகாவில் 10 தேர்வு மையங்களில் 2,937 தேர்வர்களும் தேர்வு எழுத உள்ளனர். மாவட்டத்தில் மொத்தம் 174 தேர்வு மையங்களில் 51,433 தேர்வர்கள் போட்டி தேர்வினை எழுத உள்ளனர். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

இந்த தேர்வுகளை எழுதும் தேர்வர்கள், தேர்வு மையத்திற்கு காலை 8.30 மணிக்கே தவறாமல் வந்து விடவேண்டும். முதலில், தேர்வர்களின் புகைப்படம், பெயர், பதிவு எண் உள்ளிட்ட விவரங்கள் சரிபார்க்கும் பணிகள் மேற்கொள்ளப்படும். 9.00 மணிக்கு தேர்வு மைய கதவுகள் பூட்டப்படும் என்பதால் அதற்கு முன் வரும் தேர்வர்கள் மட்டுமே தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். தேர்வு மையங்களுக்கு தேர்வர்கள் செல்ல வசதியாக அனைத்து தேர்வு மையங்களிலும் அரசு பஸ்கள் நின்று செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்வு பணிகளில் ஈடுபட உள்ள அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணிகளை சரியாக மேற்கொண்டு, சிறப்பாக பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு மாவட்ட ஆட்சியர் உமா பேசினார்.

கூட்டத்தில் டிஆர்ஓ சுமன், ஆர்டிஓக்கள் பார்த்தீபன், சுகந்தி, கூட்டுறவு சங்கங்களின் இணைபதிவாளர் அருளரசு உள்ளிட்ட அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
ai solutions for small business