மொடக்குறிச்சி அருகே புகையிலை பொருட்கள், கஞ்சா பதுக்கிய இருவர் கைது

கைது செய்யப்பட்ட இருவரையும் படத்தில் காணலாம்.
மொடக்குறிச்சி அருகே புகையிலை பொருட்களை மற்றும் கஞ்சாவை விற்பனை செய்வதற்காக பதுக்கிய இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே உள்ள ஆலாங்காட்டு வலசு பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருவதாக மொடக்குறிச்சி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்குள்ள ஒரு வீட்டில் 400 கிலோ புகையிலை பொருட்கள், 600 கிராம் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர். இதனையடுத்து, வீட்டில் இருந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர்கள் ராஜஸ்தான் மாநிலம் ஜாலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மேகாராம் மகன் கௌதம் குமார் (வயது 30), அதே பகுதியைச் சேர்ந்த மந்தாரா மகன் அக்மாரா (வயது 30) என்பதும் 2 பேரும் சேர்ந்து வீட்டில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததும் தெரியவந்தது. மேலும், கவுதம் குமார் மொடக்குறிச்சி நால்ரோடு பகுதியில் செல்போன் கடையும், அக்மாரா, எழுமாத்தூரில் செல்போன் சர்வீஸ் கடை வைத்திருந்ததும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, அவர்களிடம் இருந்து 400 கிலோ புகையிலை பொருட்கள், 600 கிராம் கஞ்சா மற்றும் விற்பனைக்கு பயன்படுத்திய கார் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் கைது செய்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu