கேழ்வரகு சாகுபடியில் அதிக மகசூல் பெற வேளாண்துறை யோசனை
பைல் படம்
கேழ்வரகு சாகுபடியில் மேலாண்மை நடைமுறைகளை கடைபிடித்தால் அதிக மகசூல் பெறலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட வேளாண் அறிவியல் நிலைய தொழில்நுட்ப வல்லுநர் சரவணகுமார் கூறியதாவது:
ஈரோடு மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் கேழ்வரகு பயிர் அதிகமாக சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் சுமார் 4000 எக்டர் பரப்பளவில் இப்பயிரானது சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. ஆனால், மகசூலை ஒப்பிடுகையில் மற்ற பயிர்களை காட்டிலும் குறைவாகவும், நிகர வருவாயும் குறைவாக உள்ளது. தற்போது மலைப்பகுதிகளில் நன்கு மழை பொழிந்து வருவதால் விவசாயிகள் கேழ்வரகு சாகுபடியினை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளனர். எனவே இப்பயிரின் மகசூலை அதிகரிக்க நாற்று முறை நடவு மற்றும் திருந்திய கேழ்வரகு சாகுபடி தொழில்நுட்பங்கள் பெரிதும் உதவுகின்றன. இத்தகைய நாற்று முறை நடவிற்கான வீரிய மற்றும் தரமான நாற்றுகளை உற்பத்தி செய்யும்போது மேலாண்மை முறைகளை கையாள வேண்டும்.
கேழ்வரகில் நாற்றுகளை உற்பத்தி செய்ய தேர்வு செய்யும் இடமானது நீர் தேங்காத வண்ணம், அதே சமயம் நீர் ஆதாரத்திற்கு அருகில் இருக்க வேண்டும். ஒரு ஏக்கர் நடவு செய்வதற்கான நாற்றுகளை உற்பத்தி செய்ய 5 சென்ட் நிலம் இருந்தால் போதுமானதாகும். அவ்வாறு தேர்வு செய்த நிலத்தினை நன்கு புழுதிபட உழவு செய்து 500 கிலோ தொழுஉரம் இட வேண்டும்.
பின்னர் நிலத்தினை நன்கு சமன்படுத்திட வேண்டும். நன்கு சமன்படுத்திய நிலத்தினை சிறு சிறு பாத்திகளாக பிரித்து, 3 மீட்டர் நீளம் மற்றும் 1.2 மீட்டர் அகலத்தில் பாத்திகள் அமைப்பது, நாற்றுகளை பராமரிக்க எளிதாக இருக்கும். நன்கு முற்றிய தரமான விதைகளை விதைப்பிற்கு தேர்வு செய்தல் மிகவும் அவசியம்.
ஒரு ஏக்கருக்கு தேவையான நாற்றுகளை உற்பத்தி செய்ய 2 கிலோ விதை இருந்தாலே போதுமானதாகும். தேர்வு செய்யப்பட்ட விதைகளை உயிர் உரங்கள் அல்லது பூஞ்சாணங்கள் கொண்டு விதை நேர்த்தி செய்து விதைப்பதன் மூலம் விதை சார்ந்த நோய்களை கட்டுப்படுத்துவதுடன் ரசாயண உரங்களின் பயன்பாட்டினையும் தவிர்க்கலாம்.
ஒரு ஏக்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட விதையுடன் 200 கிராம் அசோஸ்பைரில்லம் மற்றும் 200 கிராம் பாஸ்போ பாக்டீரியா கொண்டு விதை நேர்த்தி செய்தபின் விதைக்கலாம். மேலும் ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் சூடோமோனாஸ் கொண்டு விதை நேர்த்தி செய்வதன் மூலம் விதை சார்ந்த நோய்கள் பரவுவதை கட்டுப்படுத்தலாம்.
இவ்வாறு நேர்த்தி செய்யப்பட்ட விதைகளை வரிசை விதைப்பாகவோ அல்லது சீராக தூவலாம். விதைப்பிற்கு முன் மண்ணை கிளறி விட்டு பின்னர் தூவி பின்னர் மூடிவிட வேண்டும். விதைகளின் முளைப்புத் திறனை உறுதி செய்ய விதைத்தவுடன் நீர் பாய்ச்சுதல் மற்றும் 3ம் நாள் நீர் பாய்ச்சுதல் அவசியம். பின்னர் மண்ணின் தன்மையினைப் பொறுத்து 5 நாட்கள் இடைவெளியில் நாற்றங்காலுக்கு நீர் பாய்ச்சுவதன் மூலம் நாற்றுகளின் சீரான வளாச்சியினை பெறலாம்.
பொதுவாக கேழ்வரகு நாற்றுகளை எவ்வித நோய் மற்றும் பூச்சிகள் தாக்குவதில்லை. மேலும் நோய் மற்றும் பூச்சி எதிர்ப்புத் திறன் கொண்ட ரகங்களான கோ-14, ஜி.பி.யு–28 போன்றவற்றை பயிரிடுவதன் மூலம் நோய் மற்றும் பூச்சிகள் தாக்குதலை தவிர்க்கலாம். 17 முதல் 20 நாட்கள் வயதுடைய நாற்றுகளை நடவிற்கு பயன்படுத்துவதன் மூலம் அவை நன்கு தூர்கள் கிளையடித்து அதிக மகசூல் பெற உதவுகிறது.
நடுவதற்கு முன் நாற்றுகளை உயிர் உரங்களுடன் நேர்த்தி செய்து நடுவது மகசூலை அதிகரிக்க உதவும். ஒரு வாளி தண்ணீரில் 1 கிலோ அசோஸ்பைரில்லம் மற்றும் 1 கிலோ பாஸ்போ பாக்டீரியாவினை கலந்து நாற்றுகளின் வேர்கள் கரைசலில் படுமாறு 20 முதல் 30 நிமிடங்கள் ஊற வைத்து பின்னர் நடுவது சிறந்த பலனளிக்கும். இந்த முறைகளை பயன்படுத்தி வீரியமிக்க மற்றும் தரமான கேழ்வரகு நாற்றுகளை உற்பத்தி செய்யலாம் என சரவணகுமார் தெரிவிக்கிறார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu