பிளஸ்-1 மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக பெண் உள்பட 2 பேர் கைது

பிளஸ்-1 மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக பெண் உள்பட 2 பேர் கைது
X

கைது செய்யப்பட்ட தேவி.

அந்தியூர் அருகே பிளஸ்-1 மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள விராலிகாட்டூர் காலனியை சேர்ந்தவர் தனசேகரன். இவருடைய மனைவி செலம்பாயி. இவர்கள் ஈரோட்டில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார்கள். இவர்களின் மூத்த மகள் கீதா (வயது 16) அந்தியூர் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளிக்கூடத்தில் பிளஸ்-1 படித்து வந்தார். இவர் கடந்த 16-ந் தேதி இரவில் வீட்டில் இருந்தபோது திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வெள்ளித்திருப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதில் கீதா தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு தனது தந்தைக்கு செல்போனில் தொடர்பு கொண்டு அத்தை திட்டியதால் வருத்தத்துடன் உள்ளதாக கூறியுள்ளார். மேலும், மாணவி தற்கொலை செய்வதற்கு முன்பு எழுதி வைத்த கடிதத்தில் தனது சாவுக்கு தஞ்சாவூரை சேர்ந்த 3 பேர் காரணம் என்று எழுதி வைத்து உள்ளார்.

இந்தநிலையில் மாணவியின் அத்தை தேவியின் (வயது 50) மீதும், தஞ்சாவூரை சேர்ந்த 3 பேர் மீதும் தற்கொலைக்கு தூண்டியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், தேவியையும், தஞ்சாவூரை சேர்ந்த 19 வயது வாலிபரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், தேவி தனது மகளுடன் கீதாவை சேரக்கூடாது என்று மிரட்டியது தெரியவந்தது. மேலும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு கீதா கோபியில் உள்ள ஒரு மில்லில் வேலை பார்த்தபோது தஞ்சாவூரை சேர்ந்த வாலிபர்களும் வேலை செய்து உள்ளனர். அப்போது மாணவி கீதாவின் செல்போன் எண்ணை பெற்றுக்கொண்ட அந்த வாலிபர்கள் செல்போனில் தொடர்பு கொண்டு தொல்லை கொடுத்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் தஞ்சாவூரை சேர்ந்த மேலும் 2 வாலிபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Tags

Next Story
ai in future agriculture