பவானியில் லாரி உரிமையாளரிடம் இருந்து ரூ.16.50 லட்சம் பணம் பறிமுதல்
ஈரோடு மாவட்டம் பவானி லட்சுமிநகரில் உரிய ஆவணமின்றி காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.16.50 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
HIGHLIGHTS
பவானி லட்சுமிநகரில் உரிய ஆவணமின்றி காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.16.50 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
ஈரோடு மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம், மற்றும் பரிசு பொருட்கள் விநியோகம் செய்வதை தடுக்கும் வகையில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பவானி லட்சுமி நகரில் இன்று காலை பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது ஆந்திரா பதிவு எண் கொண்ட பொலிரோ ஜீப் ஒன்று வந்தது. ஜீப்பை நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்த போது ரூ.16 லட்சத்து 50 ஆயிரம் ரொக்க பணம் இருந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து ஜீப்பில் வந்தவரிடம் விசாரித்த போது அவரை ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சுரேந்தர் (வயது 50) என்பதும், லாரி அதிபரான இவர் திருச்செங்கோடு வந்து அங்கிருந்து குன்னத்தூரில் ரிக் வண்டியை ஆல்ட்டர் செய்வதற்காக பணம் கொண்டு வந்ததும் தெரியவந்தது.
எனினும் அந்த பணத்திற்குரிய ஆவணம் அவரிடம் இல்லாததால் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து ஈரோட்டில் உள்ள ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் ஒப்படைத்தனர். தொகை அதிகமாக இருந்ததால் அந்த பணத்தை அவர்கள் ஈரோடு வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.