குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த புகையிலை பொருள்கள் பறிமுதல்

குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த புகையிலை பொருள்கள் பறிமுதல்

கைது செய்யப்பட்டவர்

புகையிலைப் பொருட்களை விற்பனைக்காக குடோனில் பதுக்கி வைத்திருப்பதாக தனிப்படை காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் புழக்கத்தை கட்டுப்படுத்த காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் அடிப்படையில் இன்று பேரூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சுண்டக்காமுத்தூர் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனைக்காக குடோனில் பதுக்கி வைத்திருப்பதாக தனிப்படை காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இந்த தகவலின் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் தனிப்படை காவ‌ல் துறை‌யின‌ர் சுண்டக்காமுத்தூர் அருகே சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை குடோனில் பதுக்கி வைத்திருந்த அதே பகுதியைச் சேர்ந்த ஜூஹாரமல் (43) என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

மேலும் அவரிடமிருந்து ரூபாய் 2 லட்சம் மதிப்புள்ள சுமார் 133 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களையும் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

கோவை மாவட்டத்தில் போதை பொருட்களின் விற்பனையை தடுக்கும் பொருட்டும், அதன் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவின்பேரில் கடந்த 01.05.2024 முதல் மாவட்ட காவல் துறையினரால் நடத்தப்பட்ட சிறப்பு அதிரடி சோதனைகளின் அடிப்படையில் தற்போது வரை தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட 44 நபர்கள் மீது 37 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அவர்களிடமிருந்து சுமார் 506.71 கிலோகிராம் எடையுள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுபோன்று போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ, ஈடுபட்டவர்கள் மீது தொடர்ந்து சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.

Tags

Next Story