கோவை அருகே தொண்டாமுத்தூரில் உயர்ரக போதை பொருள் பறிமுதல்: இருவர் கைது

கோவை அருகே தொண்டாமுத்தூரில் உயர்ரக போதை பொருள் பறிமுதல்: இருவர் கைது

பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்கள்.

ரூ. 60 ஆயிரம் மதிப்பு உள்ள 3 கிராம் அடங்கிய போதைப் பொருள் நிரப்பிய பவுடர் டப்பாக்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வட மாநிலத் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர் வசித்து வருகின்றனர். அவர்கள் பாக்கு உரிக்கும் தொழில், கட்டட வேலை, காட்டு வேலை உள்ளிட்ட பல்வேறு வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வட மாநில தொழிலாளர்கள் இடையே கஞ்சா விற்பனை மற்றும் போதை பொருட்கள் புழக்கத்தில் இருப்பதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில், தொண்டாமுத்தூர் காவல் துறையினர் மற்றும் தனிப் பிரிவு காவல் துறையினர் அடங்கிய குழு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தென்னமநல்லூர் சாலையில் உள்ள புத்தூர்பாலம் அருகே, அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அசார் இஸ்லாம் (வயது 24) மற்றும் அனார் உசேன் (வயது 28) ஆகியோர் உயர்ரக போதைப்பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து ரூ. 60 ஆயிரம் மதிப்பு உள்ள 3 கிராம் அடங்கிய போதைப் பொருள் நிரப்பிய பவுடர் டப்பாக்களை, தொண்டாமுத்தூர் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.மேலும், 2 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.

கோவை மாவட்டத்தில் போதை பொருட்களின் விற்பனையை தடுக்கும் பொருட்டும், அதன் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களது உத்தரவின் பேரில் கடந்த 01.05.2024 முதல் மாவட்ட காவல்துறையினரால் நடத்தப்பட்ட சிறப்பு அதிரடி சோதனைகளின் அடிப்படையில் தற்போது வரை போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 126 நபர்கள் மீது 80 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களிடமிருந்து சுமார் 192.970 கிலோ எடையுள்ள கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுபோன்று போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ, ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.

Tags

Next Story