கோவை அருகே கருமத்தம்பட்டியில் 14 கிலோ கஞ்சா பறிமுதல் :3 பேர் கைது

கோவை அருகே கருமத்தம்பட்டியில் 14 கிலோ கஞ்சா பறிமுதல் :3 பேர் கைது

பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா

கோவை அருகே ஆந்திராவில் இருந்து விற்பனைக்காக பேருந்து மூலம் கடத்தி வந்த14 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில், காவல் துறையினர் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர். அதன் அடிப்படையில் இன்று கருமத்தம்பட்டி காவல் நிலைய பகுதியில் கஞ்சா விற்பனைக்கு கொண்டு வருவதாக தனிப்படை காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இந்த தகவலின் பேரில் தனிப்படை காவல் துறையினர் சென்னியாண்டவர் பேருந்து நிறுத்தம் அருகே வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது கஞ்சாவை விற்பனைக்கு கொண்டு வந்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த செல்வம் (44) , இளையராஜா (47) மற்றும் பிரவீன் (19) ஆகிய 3 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் ஆந்திராவில் இருந்து விற்பனைக்காக பேருந்து மூலம் இங்கு கடத்தி வந்த 1 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 14 கிலோ கஞ்சாவை அவர்களிடமிருந்து காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட நபர்களை காவல் துறையினர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

கோவை மாவட்டத்தில் போதை பொருட்களின் விற்பனையை தடுக்கும் பொருட்டும், அதன் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களது உத்தரவின் பேரில் கடந்த 01.05.2024 முதல் மாவட்ட காவல்துறையினரால் நடத்தப்பட்ட சிறப்பு அதிரடி சோதனைகளின் அடிப்படையில் தற்போது வரை போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 44 நபர்கள் மீது 24 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களிடமிருந்து சுமார் 70.710 கிலோகிராம் எடையுள்ள கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுபோன்று போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ, ஈடுபட்டவர்கள் மீது தொடர்ந்து சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.

Tags

Next Story