ஆளுநரை கண்டித்து பொள்ளாச்சி அரசு கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்..!

ஆளுநரை கண்டித்து பொள்ளாச்சி அரசு கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்..!

கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

கருப்பு கொடிகளுடன் ஆளுநரின் செயலை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தமிழ்நாடு சட்டப்பேரவையின் நடப்பாண்டிற்கான முதல் கூட்டம் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. தேசிய கீதத்திற்கு உரிய மரியாதை கொடுக்க வேண்டும் எனவும், உரையின் துவக்கத்திலும் இறுதியிலும் இசைக்க வேண்டும் என்று பலமுறை கோரிக்கை மற்றும் அறிவுரை வழங்கியுறுத்தியும் தேசிய கீதம் புறக்கணிக்கப்பட்டுள்ளது என தமிழக சட்டசபை கூட்டத்தொடரில், ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார்.

மேலும் தமிழக அரசின் உரையில் உள்ளவற்றை உண்மையின் அடிப்படையிலும், தார்மீக அடிப்படையிலும் என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. அதனால் படிக்கவில்லை. எனவே, இந்த சட்டப்பேரவையை பொறுத்தவரை, நான் எனது உரையை முடிக்கிறேன் என குற்றசஞ்சாட்டி தமிழ்நாடு அரசு வழங்கிய உரையை படிக்காமல் புறக்கணிப்பு செய்தார்.

இதற்கு தமிழக சட்டசபை கூட்டத் தொடரில் பங்கேற்ற ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டசபையின் மாண்பை கெடுக்கும் விதமாக நடந்து கொண்டதாக பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் ஆளுநரின் நடவடிக்கையை கண்டிக்கும் வகையில் கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் வளாகத்தில் திமுக மாணவரணி மற்றும் அக்கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது கருப்பு கொடிகளுடன் ஆளுநரின் செயலை கண்டித்தும், ஆளுநர் தமிழ்நாட்டை விட்டு வெளியேற கோரியும் முழக்கங்களை எழுப்பினர். ஆளுநர் தொடர்ந்து தமிழ்நாடு அரசுடன் மோதல் போக்கை கடைபிடித்து வருவதாகவும், ஆளுநர் தமிழ்நாடு அரசின் உரையை படிக்காமல் புறக்கணிப்பு செய்து இருப்பது தமிழக மக்களை அவமதிக்கும் செயல் எனவும் அவர்கள் குற்றம்சாட்டினர். இந்த போராட்டம் காரணமாக அப்பகுதியில் பாதுகாப்பிற்கு காவல் துறையினர் குவிக்கப்பட்டு இருந்தனர்.

Tags

Next Story