‘சபரிமலை பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் இல்லை’ எல்.முருகன் குற்றச்சாட்டு

‘சபரிமலை பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் இல்லை’  எல்.முருகன் குற்றச்சாட்டு

கோவையில் மத்திய அமைச்சர் எல். முருகன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் அடிப்படை வசதிகள் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர் என மத்திய அமைச்சர் எல். முருகன் குற்றம் சாட்டினார்.

கோயம்புத்தூர் மாவட்டம், அன்னூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்ற 'நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம்' நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியதாவது:-

2047 ஆம் ஆண்டில் இந்தியாவை வல்லரசு நாடாக உருவாக்கும் நோக்கில் மத்திய அரசு செயல்படுத்தி வரும் மக்களுக்கான வளர்ச்சித் திட்டங்களை பொதுமக்களிடம் கொண்டு செல்லும் வகையில் நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில் மத்திய அரசின் திட்ட பயனாளிகளை நேரில் சந்தித்து கருத்து பெறப்படுவதோடு, பல்வேறு திட்டங்களில் புதியதாக பயனாளிகளும் இணைக்கப்பட்டு வருகின்றனர்.

சபரிமலையில் பக்தர்களுக்கு வசதிகள் இல்லாதது குறித்து பாராளுமன்றத்தில் பா.ஜ.க. சார்பிலும், உயர்நீதிமன்றத்திலும், பல்வேறு அமைப்புகளின் சார்பிலும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதில் கேரளா அரசு நேரடியாக தலையிட்டு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் மாதந்தோறும் ஐந்து கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டம் மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் பாரத பிரதமரால் ஜன்தன் வங்கி கணக்குகள் துவங்கப்பட்டுள்ளன. அதில் தமிழக அரசு வழங்கும் பொங்கல் பரிசுத் தொகையை செலுத்தினால் அது நேரடியாக மக்களைச் சென்று பயனளிக்கும்.

தேசத்தின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவது என்பது அவசியமாகும். தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கும்போது நிலம் கையகப்படுத்தப்படுகிறது. அப்போது சந்தை விலையை விட மூன்று மடங்கு அதிகமாக கொடுத்து மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் உள்கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும்.

தொழில் முதலீட்டாளர்கள் நமது மாநிலத்திற்கு வருவது வரவேற்கத்தக்க விஷயமாகும். அதே நேரத்தில் அரசாங்கம் அவர்களுக்கு தேவையான வெளிப்படை தன்மையான நடவடிக்கைகளை மேற்கொண்டு, அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கி தொழில்துறையினரை ஊக்குவிக்க வேண்டும். மேலும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு மின் கட்டண உயர்வை அமல்படுத்தியதால் பாதிப்படைந்து வருகின்றனர். அதனை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story