கணவரை கட்டையால் அடித்து கொலை செய்த மனைவி கைது

கணவரை கட்டையால் அடித்து கொலை செய்த மனைவி கைது

சஹானா பேகம்

அடிக்கடி மது குடித்து விட்டு மனைவியிடம் பணம் கேட்டு தகராறு செய்து வந்தார்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா எஸ்.மேட்டுப்பாளையம் இந்திரா நகரை சேர்ந்தவர் ராஜன். இவருடைய மகன் நந்தகுமார் தொழிலாளி. இவருடைய மனைவி சஹானா பேகம். மதுக்கரை பகுதியைச் சேர்ந்த இவரை கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நந்தகுமார் காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். நந்தகுமார் இடிகரை ராமானுஜம் நகர் குடியிருந்து கொண்டு மணிகாரம் பாளையத்தில் உள்ள ஒரு கோழி கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

இவருக்கு குடிப்பழக்கம் உள்ளதாக தெரிகிறது. அவர் அடிக்கடி மது குடித்து விட்டு மனைவியிடம் பணம் கேட்டு தகராறு செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த 25 ஆம் தேதி கணவன் - மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சஹானா பேகம் வீட்டில் இருந்த பூரிக் கட்டையால் நந்தகுமாரை சரமாரியாக அடித்து உள்ளார். இதில் அவருக்கு தலையில் ரத்த காயம் ஏற்பட்டது.

கோபமடைந்த ரந்தகுமார் தன் மகனை அழைத்துக் கொண்டு கோழி கடைக்கு சென்று அங்கேயே படுத்து தூங்கிவிட்டதாக கூறப்படுகிறது. மறுநாள் காலையில் கோழிக்கடை உரிமையாளர் பிரகாஷ் வந்து நந்தகுமாரை எழுப்பி உள்ளார். அப்பொழுது அவர் மயங்கிய நிலையில் இருந்தார். இதனால் சந்தேகம் அடைந்த அவர், மருத்துவரை அழைத்து வந்து பரிசோதித்த போது நந்தகுமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரியவந்தது. இது குறித்து புகாரின் பேரில் காவல் துறையினர் நந்தகுமாரின் உடலை கைப்பற்றி பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை வழக்கு பதிவு செய்து அவருடைய மனைவி சஹானா பேகத்தை கைது செய்தனர்.

Tags

Next Story