தடாகம் பகுதியில் 2 கிலோ கஞ்சா பறிமுதல் ; ஒருவர் கைது

தடாகம் பகுதியில் 2 கிலோ கஞ்சா பறிமுதல் ; ஒருவர் கைது

கஞ்சா வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டவர்

40 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 2 கிலோ கஞ்சாவை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில் காவல் துறையினர் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர். அதன் அடிப்படையில் இன்று தடாகம் காவல் நிலைய பகுதியில் கஞ்சா விற்பனைக்கு கொண்டு வருவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் தடாகம் காவல் துறையினர் ஆனைகட்டி சோதனை சாவடியில் சோதனை மேற்கொண்ட போது, அவ்வழியாக சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பபித்ரா கராட் (19) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர்.அப்போது அவர் கஞ்சாவை விற்பனைக்கு கொண்டு வந்தது தெரியவந்ததை அடுத்து, அவரை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 2 கிலோ கஞ்சாவை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட பபித்ரா கராட்டை நீதிமன்ற காவலில் காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.

கோவை மாவட்டத்தில் போதை பொருட்களின் விற்பனையை தடுக்கும் பொருட்டும், அதன் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கையின் பேரில் இந்தாண்டில் காவல்துறையினரால் நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 19 நபர்கள் மீது 16 வழக்குகள் பதிவு செய்தும், அவர்களிடமிருந்து சுமார் 12.330 கிலோ கிராம் எடையுள்ள கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதுபோன்று போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ, ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.

Tags

Next Story