கோவையில் கஞ்சா சாக்லேட் பதுக்கி வைத்திருந்த வடநாட்டு இளைஞர் கைது

கோவையில் கஞ்சா சாக்லேட் பதுக்கி வைத்திருந்த வடநாட்டு இளைஞர் கைது

கோவையில் கஞ்சா சாக்லெட் வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பிரந்தாபன் தாஸ்

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 190 நபர்கள் மீது 143 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 423 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல். விற்பனைக்கு வைத்திருந்த வெளிமாநில நபரை போலீஸார் கைது செய்தனர்.

சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்.

அதன் அடிப்படையில் நேற்று (25. 04. 2023) பெரியநாயக்கன் பாளையம் பகுதியில் கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகள் விற்பனைக்கு வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், பெரியநாயக்கன் பாளையம் காவல் உதவி ஆய்வாளர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடமான ஒன்னிபாளையம் பகுதிக்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர்.

அப்போது கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகள் விற்பனைக்கு வைத்திருந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த இந்திரமணி மகன் பிரந்தாபன் தாஸ் (33) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 2. 550 கிலோ கிராம் எடையுள்ள கஞ்சா சாக்லேட்டுகள் மற்றும் 300 கிராம் எடையுள்ள கஞ்சா ஆகியவற்றை பறிமுதல் செய்து, அந்த நபரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

கோவை மாவட்டத்தில் போதை பொருட்களின் விற்பனையை தடுக்கும் பொருட்டும், அதன் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கையின் பேரில் கடந்த 01. 01. 2023 முதல் தற்போது வரை காவல்துறையினரால் நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 190 நபர்கள் மீது 143 வழக்குகள் பதிவு செய்தும், அவர்களிடமிருந்து சுமார் 423. 926 கிலோ கிராம் எடையுள்ள கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ, ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.

போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ காவல்துறைக்கு கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் பொதுமக்கள் தயங்காமல் தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்களது விவரம் ரகசியமாக வைக்கப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது.

Tags

Next Story