சவுக்கு சங்கர், பெலிக்ஸ் ஜெரால்ட் ஜாமீன் மனு மீண்டும் ஒத்திவைப்பு

சவுக்கு சங்கர், பெலிக்ஸ் ஜெரால்ட் ஜாமீன் மனு மீண்டும் ஒத்திவைப்பு

சவுக்கு சங்கர்

இந்த மனுவை விசாரித்த நீதிபதி சரவண பாபு இருவரின் ஜாமீன் மனுவை 30 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

பெண் காவல் துறையினரையும், காவல்துறை உயர் அதிகாரிகளையும் அவதூறாக பேசியதாக யூ டியூபர் சவுக்கு சங்கர் மீது கோவை உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கோவை மாநகர சைபர் கிரைம் உதவி ஆய்வாளர் சுகன்யா கொடுத்த புகாரில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

பின்னர் சவுக்கு சங்கர் மீது தேனி மாவட்ட காவல் துறையினர் கஞ்சா வழக்கு பதிவு செய்த நிலையில், கோவை மத்திய சிறையில் இருந்த சவுக்கு சங்கரை தேனி காவல் துறையினர் கைது செய்தனர். இதேபோல திருச்சி, சென்னையில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளிலும் காவல் துறையினர் சவுக்கு சங்கரை காவல் துறையினர் கைது செய்தனர்.

இதேபோல சவுக்கு சங்கர் பேசிய வீடியோ எடிட் செய்யாமல் வெளியிட்ட ரெட் பிக்ஸ் யூ டியூப் உரிமையாளர் பெலிக்ஸ் ஜெரால்ட் கைது செய்யப்பட்டார். இவர் மீது திருச்சி, கோவை உள்ளிட்ட பகுதிகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பெண் காவலர்கள் மற்றும் காவல் உயர் அதிகாரிகளை அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கர் மற்றும் பெலிக்ஸ் ஜெரால்ட் ஆகியோர் கோவை நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த ஜாமின் மனு மீதான விசாரணை இன்று கோவை நான்காவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி சரவண பாபு இருவரின் ஜாமீன் மனுவை 30 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். சவுக்கு சங்கர் சென்னை புழல் சிறையில் வைக்கப்பட்டுள்ளார். பெலிக்ஸ் ஜெரால்ட் திருச்சி மத்திய சிறையில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இருவரையும் சைபர் கிரைம் காவல் துறையினர் தலா ஒரு நாள் காவலில் எடுத்து விசாரித்தது குறிப்பிடத்தக்கது.


Tags

Next Story