கோவையில் கனிமொழி உதவியாளரின் தம்பி என போதையில் மிரட்டிய மூவர் கைது

கோவையில் கனிமொழி உதவியாளரின் தம்பி என போதையில் மிரட்டிய மூவர் கைது

போலீசாரால் கைது செய்யப்பட்ட 3 பேர்.

தி.மு.க எம்.பி. கனிமொழியின் உதவியாளரின் சகோதரர் என்று கூறி போலீசாரை மிரட்டிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவை காந்திபுரம் நூறு அடி சாலையில் வாகன தணிக்கையில் போலீசார் ஈடுபட்டு வந்த நிலையில் தாறுமாறாக வந்த உயர் ரக கார் ஒன்றை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அப்போது மதுபோதையில் காரில் இருந்து இறங்கிய இளைஞர் ஒருவர் நான் யார் தெரியுமா? நீ என்ன பெரிய ஆளா? என்று கேள்வி கேட்டு மதுபோதையில் அலப்பறையில் ஈடுபட்டார். இந்த நிலையில் அந்த நபரின் செல்போனை போலீசார் பறித்ததாக தெரிகிறது.

இதில் ஆவேசம் அடைந்த அந்த போதை ஆசாமி தான் தி.மு.க எம்.பி. கனிமொழியின், உதவியாளரின் சகோதரர் என்று கூறி போலீசாரை மிரட்ட ஆரம்பித்தார். அவருடன் வந்த ஒருவர் அவரை சமாதானப்படுத்தி அழைத்துச் செல்ல முயற்சி செய்கிறார். ஆனால் மீண்டும், மீண்டும் வந்து அலப்பறையில் ஈடுபட்டு வந்தார். இதனை அங்கு இருந்த ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்தார்.

குடிபோதையில் வாகனம் இயக்கி சோதனையில் ஈடுபட்ட காவல் துறையினரை மிரட்டும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் போக்குவரத்து காவலர் கோவை காட்டூர் சட்டமன்ற காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் கிரண், பாலாஜி மற்றும் சிவானந்தம் ஆகிய மூவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அவர்கள் மீது போக்குவரத்துக் காவலரிடம் தகாத வார்த்தையால் மிரட்டியது பணி செய்யவிடாமல் தடுத்தது பொது இடத்தில் குடிபோதையில் ரகளை செய்வது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.

இந்நிலையில் அவர்கள் நாங்கள் மது போதையில் இருந்ததால் காவல் துறையினரிடம் தகாத வார்த்தையில் பேசி தகராறில் ஈடுபட்டதாகவும் இதனால் காவலர்களிடம் மன்னிப்பு கேட்பதாகவும், மேலும் தி.மு.க எம்.பி கனிமொழி பி.ஏ யார் என்று தங்களுக்கு தெரியாது என்றும், பொது இடத்தில் அவர்கள் பெயரை பயன்படுத்தியது தவறு என்றும் அதற்கு மன்னிப்பு கேட்கும் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.

Tags

Next Story