பேருந்தில் பெண் பயணிகளிடம் திருட முயன்ற வடமாநில இளைஞருக்கு தர்ம அடி

திண்டிவனம் அருகே சொகுசு பேருந்து பயணியிடம் திருட முயன்ற வடமாநில இளைஞர்களுக்கு பயணிகள் தர்மஅடி கொடுத்தனர்.

Update: 2022-08-26 02:00 GMT

கைது செய்யப்பட்ட திருடன் சுபேர்கான்.

சென்னை எம்.ஜி.ஆர்.நகர் பகுதியை சேர்ந்தவர் தமிழரசு மனைவி மேரி (வயது 30). இவர் சொந்த வேலை காரணமாக தூத்துக்குடி செல்வதற்காக நேற்று இரவு சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்லும் ஆம்னி பேருந்தில் ஏறி பயணம் செய்தார்.

அந்த பேருந்து விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த சலவாதி கிராம பகுதியில் உள்ள சாலையோர ஓட்டலில் நிறுத்தப்பட்டது. அப்போது பேருந்தில் இருந்து இறங்கிய மேரி கழிப்பறைக்கு சென்று விட்டு மீ்ண்டும் பேருந்தில் ஏறினார். அந்த சமயத்தில் மேரி தான் அமர்ந்திருந்த இருக்கை மீது வைத்திருந்த பையை வாலிபர் ஒருவர் எடுத்து அதை கத்தியால் கிழித்து, அதில் இருந்த ரூ.5 ஆயிரத்தை திருடிக் கொண்டிருந்தார்.

இதைபார்த்து அதிர்ச்சியடைந்த மேரி திருடன் திருடன் என கூச்சலிட்டார். இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் கத்தியால் மேரியின் கையை கீறிவிட்டு, அங்கிருந்து தப்பி ஓடினார். இதைபார்த்த சக பயணிகள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் விரட்டிச் சென்று தப்பியோடிய அந்த வாலிபரை மடக்கி பிடித்து தர்மஅடி கொடுத்தனர்.

பின்னர் அவனை ரோஷனை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். பிடிபட்ட வாலிபரிடம் நடத்திய விசாரணையில், அந்த வாலிபர் மத்திய பிரதேச மாநிலம் தார் மாவட்டம்,மணவார் தாலுகா கார்வா கிராமத்தை் சேர்ந்த ஜமீல்கான் மகன் சுபேர்கான் (29) என்பது தெரிய வந்தது. இதையடுத்து சுபேர்கானை போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News