மின் வேலி அமைத்தல் கடும் நடவடிக்கை: விழுப்புரம் ஆட்சியர் எச்சரிக்கை

விழுப்புரம் மாவட்டத்தில் விவசாய நிலங்களில் மின் வேலி அமைத்தல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2023-03-28 16:13 GMT

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி.

விழுப்புரம் மாவட்டத்தில் விவசாய விளை நிலங்களில் மின்வேலி அமைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் பழனி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

விழுப்புரம் மாவட்டத்தில் காப்புக்காடுகள், காப்பு நிலங்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள நிலங்களில் சட்டத்திற்கு புறம்பாக மின்வேலி மற்றும் கம்பி வேலிகள் அமைப்பதால் வனவிலங்குகள், மனித உயிரிழப்புகள் ஏற்படுகிறது. விவசாயிகள், தங்களின் நிலங்களில் சாகுபடி செய்துள்ள பயிர்களை வனவிலங்குகள் சேதப்படுத்துவதை தடுப்பதற்காக சமீபகாலங்களில் மின்வேலி அமைக்கும் செயல்களில் ஈடுபடுகிறார்கள்.

இதனால் பொதுமக்கள் மற்றும் விலங்குகளின் உயிர்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் யானைகள் உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது. வன உயிரின பாதுகாப்பு சட்டம் மற்றும் தமிழ்நாடு மின்சார சட்டப்பிரிவின்படி மிக கடுமையான தண்டனைக்குரிய குற்றமாகும். எனவே விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள், தங்கள் விளைநிலங்களில் மின்வேலி அமைக்கக்கூடாது என கடுமையாக எச்சரிக்கப்படுகிறார்கள்.

இந்த எச்சரிக்கையை மீறி மின்வேலி அமைத்தால் அதனால் ஏற்படும் அனைத்து விளைவுகளுக்கும் சம்பந்தப்பட்ட நபரே பொறுப்பேற்க நேரிடும். மேலும் மின்வாரிய மற்றும் வன அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ளும்போது மின்வேலி அமைத்திருப்பது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது சட்டப்படி கடுமையான குற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே விவசாயிகள், மின்வேலி அமைப்பதை தவிர்த்து மற்ற உயிர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மாவட்ட நிர்வாகத்திற்கு தகுந்த ஒத்துழைப்பை நல்கிட வேண்டும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News