விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலைகளில் வாகன நெரிசல்: போக்குவரத்து பாதிப்பு

பொங்கல் பண்டிகை முடித்து வரும் வாகனங்களால் விழுப்புரம் மாவட்ட சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Update: 2023-01-19 02:53 GMT

விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட வாகன நெரிசல்.

பொங்கல் பண்டிகைக்காக விடப்பட்ட 4 நாட்கள் தொடர் விடுமுறை முடிந்து மீண்டும் அவரவர் ஊர் திரும்பினர். இதனால் தேசிய நெடுஞ்சாலையில் அணிவகுத்து சென்ற வாகனங்களால் விழுப்புரம் மாவட்ட தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பொங்கல் பண்டிகை கடந்த 15-ந் தேதி கொண்டாடப்பட்டது. இதையொட்டி கடந்த 14, 15, 16, 17-ந் தேதி ஆகிய 4 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டது. இந்த தொடர் விடுமுறையை கொண்டாட சென்னையில் தங்கியிருந்து வேலை செய்து வரும் தென்மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தங்களது சொந்த ஊருக்கு புறப்பட்டுச்சென்றனர். அதேபோல் பல்வேறு வெளியூர்களில் தங்கியிருந்து வேலை செய்து வருபவர்களும், பள்ளி, கல்லூரி விடுதிகளில் தங்கியிருந்து படித்து வருபவர்களும் விடுமுறையை கழிக்க அவரவர் சொந்த ஊர்களுக்கு சென்றனர்.

இந்நிலையில் பொங்கல் பண்டிகைக்கான விடுமுறை நேற்று முன்தினத்துடன் முடிவடைந்ததையடுத்து சொந்த ஊர்களுக்கு சென்ற அனைவரும் மீண்டும் தாங்கள் வேலை பார்த்து வரும் இடங்களுக்கு திரும்பினர். இவர்கள் பெரும்பாலும் கார்களில் சென்றனர். இதனால் தேசிய நெடுஞ்சாலையில் அதிகளவில் வாகனங்கள் அணிவகுத்து சென்றன. இவ்வாறு ஒரே நேரத்தில் அணிவகுத்து சென்ற வாகனங்களால் விழுப்புரம் மாவட்டத்தில் சென்னை- திருச்சி நெடுஞ்சாலையில் ஏராளமான வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.

இதனால் நள்ளிரவு முதல் நேற்று காலை வரையும் இன்றும் வாகன நெரிசல் ஏற்பட்டு வருகிறது. வாகனங்கள் அனைத்தும் சீரான வேகத்தில் மெதுவாக நகர்ந்து சென்றதை காண முடிந்தது.

விழுப்புரம் ஜானகிபுரம் புறவழிச்சாலை சந்திப்பில் இருந்து முத்தாம்பாளையம் மற்றும் விக்கிரவாண்டி சுங்கச்சாவடி சந்திப்பு வரை வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்று நின்று சென்றதால் போக்குவரத்து நெரிசலில் சிக்கி உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளியூர் செல்லும் மக்களும் மிகவும் அவதியடைந்தனர்.

மேலும் இதேபோன்று விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள அனைத்து பேருந்து நிலையங்களிலும் பயணிகள் கூட்டம் அலைமோதியது. பேருந்தில் ஒருவருக்கொருவர் முண்டியடித்துக்கொண்டு சென்றனர். அதேபோல் தென்மாவட்டங்களில் இருந்து விழுப்புரம் வழியாக சென்னைக்கு சென்ற அனைத்து ரெயில்களிலும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது, வழிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News