மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்களுக்கு தனி நிதி ஒதுக்க கோரிக்கை

விழுப்புரம் இன்று நடைபெற்ற மாவட்டஊராட்சிகள் சேர்மன் கூட்டத்தில் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்களுக்கு தனி நிதி ஒதுக்கீடு செய்ய கோரிக்கை;

Update: 2022-07-04 15:12 GMT

விழுப்புரம் மாவட்ட ஊராட்சிக்குழுவின் சாதாரணக்குழுக்கூட்டம் மாவட்ட ஊரக வளர்ச்சி அலுவலகத்தில் இன்று திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் ம.ஜெயச்சந்திரன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் ஷீலாதேவி சேரன், மாவட்ட வளர்ச்சி அலுவலர் குருசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் ஜெயச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, நாட்டின் 15-ஆவது மானியக்குழுவில் ஊராட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி மூன்றடுக்கு முறையில் செயல்படுத்தப்படுகிறது.

மாவட்ட ஊராட்சிக்குழு, ஒன்றியக்குழு, ஊராட்சிகள் என மூன்று அடுக்குமுறையில் நிதி ஒதுக்கப்பட்டாலும் தனித்தனியாக ஒதுக்கப்படுவதில்லை. 50,000 வாக்குகளுக்கு ஒரு மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் தேர்வு செய்யப்படும் நிலையில், அவருக்கு என தனியாக நிதி ஒதுக்கினால் தான் மக்களின் தேவைகளை முறையாக பூர்த்தி செய்ய முடியும்.

எனவே, பெரிய அளவிலான வளர்ச்சிப்பணி நிதியை மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் மூலம் நிதி ஒதுக்கி செயல்படுத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வேறு எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை. இத்தீர்மானம் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிவைக்கப்படும் என்றார் .

மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்களுக்கு தனியாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று விழுப்புரம் மாவட்ட ஊராட்சிக் குழுக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கதுனர்.

இக்கூட்டத்தில் அனைத்து மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்களும் பங்கேற்றனர்.

Tags:    

Similar News