விழுப்புரம் அருகே மூதாட்டியை தாக்கியவரை கைது செய்ய கோரிக்கை

விழுப்புரம் அருகே மூதாட்டியை தாக்கிய தி.மு.க. பிரமுகரை கைது செய்ய கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.

Update: 2023-03-19 11:06 GMT

காயம் அடைந்த மூதாட்டிக்கு ஆறுதல் கூறிய தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர்.

விழுப்புரம் அருகே விவசாய நிலத்தை ஆதிதிராவிடர் இன மூதாட்டியிடம் நிலம் பிடுங்க முயற்சித்த தி.மு.க. ஒன்றிய செயலாளரை கைது செய்ய விழுப்புரம் மாவட்ட தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தி உள்ளது.

அஞ்சலை.

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியம், ப.வில்லியனூர் ஊராட்சிக்கு உட்பட்ட கள்ளிகுளம் ஆதிதிராவிடர் பகுதியைச் சேர்ந்த காத்தவராயன் மனைவி அஞ்சலை வயது(78). இவருக்கு அப்பகுதியில் சுமார் 1ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. அந்த நிலத்தின் மீது ஆசைப்பட்ட ப.வில்லியனூர் ஊராட்சி பகுதியை சேர்ந்த கண்டமங்கலம் தி.மு.க. ஒன்றிய செயலாளர் வி.ஜி.பிரபாகரன் அஞ்சலையிடம் சென்று உன்  நிலத்தை  கிரயம் செய்து கொடுத்துவிடு என்று மிரட்டி, நிலத்திலேயே  அடித்து, உதைத்து உள்ளதாக புகார் கூறப்பட்டது. இதில் படுகாயமடைந்த அஞ்சலையை அங்கிருந்தவர்கள் மீட்டு உடனடியாக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்து சிகிச்சை பெற்று வந்தார்,

இந்நிலையில் அவரை ஞாயிற்றுக்கிழமை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகம் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்து வீட்டுக்கு அனுப்பி உள்ளது. அவர் வீட்டிற்கு சென்ற சிறிது நேரத்தில் மீண்டும் அவரின் உடல் நிலை பாதிக்கப்பட்டதால், அவர் விழுப்புரத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தார் அப்போது அவர் மருத்துவமனை அருகே திடீரென மயங்கி விழுந்து விட்டார்,.இதனை பார்த்தவர்கள் அவரை விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்,.அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விழுப்புரம் மாவட்ட தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட குழு கூட்டத்திற்கு விழுப்புரம் வந்திருந்த மாநில துணைத்தலைவர் சங்கர், கட்சி மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் ஆகியோர் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர்.கண்ணதாசன் தலைமையில் மாவட்ட தலைவர் ஏ.சங்கரன், மாவட்ட குழு உறுப்பினர்கள் முதலிவீரன், விஸ்வநாதன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் தாண்டவராயன் ஆகியோர் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாதிக்கப்பட்ட மூதாட்டி அஞ்சலையை நேரில் சென்று, அவரிடம் சம்பவங்களை கேட்டறிந்து ஆறுதல் கூறினர்.

தொடர்ந்து இவர் மீது தாக்குதல் நடத்தியவரை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வன்மையாக கண்டிக்கிறது, மேலும் தாக்குதல் நடத்தியவர் மீது எஸ்.சி. எஸ்.டி. பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து உடனடியாக அவரை கைது செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளனர்.

Similar News