விழுப்புரம் பட்டாணி கடையில் திடீர் தீ விபத்து: ரூ.50,000 மதிப்புள்ள பொருட்கள் சேதம்

விழுப்புரம் பட்டாணி கடையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ரூ.50,000 மதிப்புள்ள பொருட்கள் சேதமாயின.

Update: 2022-08-27 13:11 GMT

தீ விபத்து ஏற்பட்ட பட்டாணிக்கடை.

விழுப்புரத்தில் மாம்பழப்பட்டு பகுதியை சேர்ந்தவர் அபித் ரஹிமான். இவர் அதே பகுதியில் உள்ள பிரபல தனியார் ஆஸ்பத்திரி எதிரில் பட்டாணிக் கடை வைத்து நடத்தி வருகிறார்.

நேற்று இரவு வழக்கம்போல் வியாபாரத்தை முடித்து கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். இன்று காலை திடீரென அந்த கடை மின்கசிவு காரணமாக தீப்பிடித்து எரிந்தது. இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இதை அக்கம் பக்கம் உள்ளவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து விழுப்புரம் தீயணைப்பு போலீஸ் நிலையம் மற்றும் கடை உரிமையாளருக்கும் தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த விழுப்புரம் தீயணைப்பு போலீசார் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்த தீ மற்ற கடைகளுக்கு பரவாமல் போராடி அணைத்தனர். இந்த தீ விபத்தில் கடையில் உள்ள சுமார் ரூ.50,000 மதிப்புள்ள பொருட்கள் முழுவதும் தீயில் எரிந்து சேதமானது.

இது குறித்து தகவல் அறிந்த விழுப்புரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீ விபத்து ஏற்பட்ட பகுதிகளை பார்வையிட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News