ஏரி,குளங்களில் தனிநபர் ஏலம், கலெக்டர் எச்சரிக்கை

விழுப்புரம் மாவட்டத்தில் அரசு ஏரி மற்றும் குளங்களில் தனி நபருக்கு மீன் ஏலம் விட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை விடுத்து உள்ளார்

Update: 2021-12-17 15:30 GMT

விழுப்புரம் கலெக்டர்

விழுப்புரம் மாவட்டத்தில் சட்டத்திற்கு புறம்பாக அரசுக்கு சொந்தமான ஏரி,குளங்களை பொது ஏலம் விடுவோர் மற்றும் மீன் குத்தகை விடுவோர்கள் மீது சட்டரீதியாக கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் த.மோகன் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது : விழுப்புரம் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை நீர்வள ஆதார பிரிவு,ஊரக வளர்ச்சித்துறை மற்றும் பஞ்சாயத்து கட்டுப்பாட்டில் பாசன ஏரிகள்,குளங்கள் மற்றும் இதர சிறு பாசன குட்டைகள் உள்ளன.

இந்த நீர்நிலைகள் ஆண்டு தோறும் பொதுப்பணித்துறை, மீன்வளத்துறை,ஊரக வளர்ச்சி மற்றும் வருவாய்த்துறை வாயிலாக மீன்பாசி குத்தகை விடப்பட்டு அரசிற்கு வருவாய் ஈட்டும் நடைமுறை உள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில்,தமிழக அரசு துறைக்கு சொந்தமான நீர் நிலைகளை ஊராட்சி மன்ற தலைவர்கள் அல்லது அவர்களை சார்ந்த தனி நபர்கள் குழுவாக இணைந்து அரசு விதிமுறைகளுக்கு மாறாக எவ்வித அலுவலக நடைமுறைகளையும் பின்பற்றாமல் சட்ட விதிகளுக்கு உட்படாமல் பொது ஏலம் விடும் நடைமுறை சில கிராமங்களில் நடைபெற்று வருகிறது.

சட்டத்திற்கு புறம்பான பொது ஏலம் விடுபவர் மற்றும் மீன் பிடிப்பவர் மீது அபராதம் விதிக்கப்பட்டு மீன்கள்,வலைகள் மற்றும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதோடு சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மோகன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News