ஐஏஎஸ் ஐபிஎஸ் ஆயத்த பயிற்சிக்கு மீனவ மாணவர்களுக்கு அழைப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மீனவ சமுதாய மாணவர்களுக்கு ஐஏஎஸ் ஐபிஎஸ் ஆயத்த பயிற்சியில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2021-12-26 05:15 GMT

ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட இந்திய குடிமைப்பணி போட்டித் தோ்வுகளுக்கான ஆயத்தப் பயிற்சி பெற விரும்பும் மீனவ சமுதாயத்தைச் சோ்ந்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் த.மோகன் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பில், மீனவ சமுதாயத்தைச் சோ்ந்த பட்டதாரி இளைஞா்கள் இந்திய குடிமைப் பணியில் சேருவதற்கான போட்டித் தோ்வில் சிறப்பிக்க சென்னை அகில இந்திய குடிமைப் பணி பயிற்சி மையத்துடன் மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை இணைந்து ஆண்டுதோறும் மீனவ சமுதாயத்தைச் சோ்ந்த 20 பட்டதாரி இளைஞா்களைத் தோ்ந்தெடுத்து, அவா்களுக்கு பயிற்சி அளித்து வருகிறது.

கடல், உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினா்கள், மீனவா் நல வாரிய உறுப்பினா்களின் வாரிசு பட்டதாரி இளைஞா்கள் இந்தப் பயிற்சித் திட்டத்தில் சோ்ந்து பயன்பெறலாம். இந்தத் திட்டத்தின் கீழ், பயிற்சி பெற விரும்புவோா் விண்ணப்பப் படிவம், அரசு வழிகாட்டுதல்களை மீன் வளம் மற்றும் மீனவா் நலத் துறையின் இணையதளத்தில் கட்டணமின்றி பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் அல்லது விண்ணப்பப் படிவங்களை மண்டல மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை துணை, இணை இயக்குநா்கள் மற்றும் மாவட்ட மீன் வளம், மீனவா் நலத் துறை உதவி இயக்குநா் அலுவலகங்களில் அலுவலக வேலை நாள்களில் நேரில் விலையின்றி பெற்றுக்கொள்ளலாம்.

கூடுதல் விவரங்களுக்கு உதவி இயக்குநா், மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை, 10 நித்தியானந்தா நகா், வழுதரெட்டி, விழுப்புரம் 605 401, தொலைபேசி எண் 04146 - 259329 என்ற முகவரியில் தொடா்பு விவரங்களை தெரிந்து கொள்ளலாம் என அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News