மீண்டும் பா.ம.க.வில் ஐக்கியமானார் முன்னாள் எம்.எல்.ஏ. ரவிராஜ்

விழுப்புரம் மாவட்டம், தைலாபுரத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. ரவிராஜ் பா.ம.க. கட்சி மீண்டும் தன்னை இணைத்துக்கொண்டார்.

Update: 2022-12-08 13:35 GMT

முன்னாள் எம்.எல்.ஏ. ரவிராஜ் டாக்டர் ராமதாஸ் முன்னிலையில் தன்னை மீண்டும் பா.ம.க.வில் இணைத்துக்கொண்டார்.

அன்புமணியின் ஆட்சி அமைவதற்கு செய்ய வேண்டிய பணிகள் அதிகமாக இருக்கிறது என்று, பா.ம.க.வில் முன்னாள் எம்.எல்.ஏ. ஒருவர்  இணையும் விழாவில் டாக்டர் ராமதாஸ் பேசினார்.

விழுப்புரம் மாவட்டம்,திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் திருத்தணி முன்னாள் எம்.எல்.ஏ. ரவிராஜ் பா.ஜ.க.வில் இருந்து விலகி பா.ம.க.வில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் முன்னிலையில் ரவிராஜ் தனது ஆதரவாளர்களுடன் தன்னை பா.ம.க.வில் மீண்டும் இணைத்துக்கொண்டார்.

இதை தொடர்ந்து அவரை வரவேற்று, டாக்டர் ராமதாஸ் பேசும்போது கூறியதாவது:-

தாய் வீட்டுக்கு வந்துள்ள பாட்டாளி மக்கள் கட்சி  சொந்தங்கள் அனைவரையும் வரவேற்கிறேன். திருவள்ளூர் மாவட்டத்தை பா.ம.க.வின் கோட்டையாக மாற்றி காட்டியவர், சில மாதங்களாக பா.ம.க.வில் இல்லை என்பது வருத்தம் தான். ஆனால் அவர் நெஞ்சத்தில் நானும், என்னுடைய நெஞ்சில் அவரும் இருந்தோம். தமிழகத்தில்   டாக்டர் அன்புமணியின் ஆட்சி அமைய செய்ய வேண்டிய பணிகள் அதிகமாக இருக்கிறது. சரியான தருணத்தில் தான், ரவிராஜ் தாயைத் தேடி வந்து விட்டார். அவரது மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட வரவேற்கிறேன். திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகள் ரவி ராஜ் தலைமையில் இணைந்து பணி செய்து 10 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து, முன்னாள் எம்.எல்.ஏ. ரவிராஜ் கூறுகையில், என்னை பற்றி தவறான தகவல்களை சொல்லி சதிகாரர்கள் என்னை டாக்டர் ராமதாசிடம் இருந்து பிரித்துவிட்டார்கள். ஆனால் தற்போது மீண்டும் நான் பா.ம.க.வில் இணைந்துள்ளேன். இங்கு இணைந்தது பதவிக்காக அல்ல. இட ஒதுக்கீட்டு பிரச்சினை நீண்டு கொண்டே போகிறது. இதில் டாக்டர் ராமதாசுடன் சிறை செல்லவே பா.ம.க.வில் இணைந்துள்ளேன். ஒரே ஒரு கோரிக்கை மட்டும் தான் திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் என்னை பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என்பது தான். இங்கு என்னுடன் வந்துள்ளவர்களின் எதிர் பார்ப்பும் அதுவே ஆகும் என்றும் ரவிராஜ் குறிப்பிட்டார்.

நிகழ்ச்சியில் பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே. மணி, மாநில தொழிற்சங்க செயலாளர் முத்துக்குமார், விழுப்புரம் கிழக்கு மாவட்ட செயலாளர் ஜெயராஜ் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதேபோன்று தமிழகம் முழுவதும் பா.ம.க. தமிழகத்தில் ஆட்சி அமைக்க வேண்டி தீவிர பிரச்சாரம் மற்றும் கட்சியில் ஆள் சேர்க்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பாமகவின் இந்த பணி மற்ற கட்சிகளிடையே தற்போது  பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.  2024ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில்  பா.ம.க. மிகப்பெரிய வெற்றி அடைய வேண்டும் என்ற இலக்கை நோக்கி அக்கட்சி பயணித்து வருகிறது என்பது  குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News