விழுப்புரம் அருகே தடுப்பணையில் மூழ்கி பள்ளி மாணவர்கள் இருவர் பலி

விழுப்புரம் அருகே பம்பை ஆற்றின் குறுக்கே உள்ள தடுப்பணையில் மூழ்கி பள்ளி மாணவர்கள் இருவர் உயிரிழந்தனர்.

Update: 2022-12-25 08:38 GMT

விழுப்புரம் அருகே பம்பை ஆற்று தடுப்பணையில் குளித்துக்கொண்டிருந்த பள்ளி மாணவர்கள் 2 பேர் நீரில் மூழ்கி பலியாகினர்.

விழுப்புரம் அருகே பானாம்பட்டு ராகவேந்திரா கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வம் மகன் உதயா (வயது 13), விழுப்புரம் மணிமேகலை தெருவை சேர்ந்த அய்யப்பன் மகன் பாலசுப்பிரமணி (14). இவர்களில் உதயா விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியிலும், பாலசுப்பிரமணி பீமநாயக்கன்தோப்பு நகராட்சி மேல்நிலைப்பள்ளியிலும் 9-ம் வகுப்பு படித்து வந்தனர். தற்போது பள்ளியில் அரையாண்டு தேர்வு முடிந்த நிலையில் சனிக்கிழமை முதல் மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சனிக்கிழமை மதியம் மாணவர்கள் உதயா, பாலசுப்பிரமணி ஆகிய இருவரும் தங்கள் நண்பர்கள் 4 பேருடன் விழுப்புரம் அருகே அய்யங்கோவில்பட்டில் உள்ள பம்பை ஆற்றுக்கு குளிக்கச்சென்றனர். அங்குள்ள தடுப்பணையில் அவர்கள் 6 பேரும் இறங்கி குளித்துள்ளனர்.

தடுப்பணையில் குளித்த 6 மாணவர்களில் 3 பேர் மட்டும் தடுப்பணையில் இருந்து வெளியே வந்தனர். மற்ற 3 பேரும் குளித்துக்கொண்டிருந்த நிலையில் திடீரென அவர்கள் 3 பேரும் சேற்றில் சிக்கிக்கொண்டனர். இதைப்பார்த்த சக நண்பர்கள் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று கூக்குரல் எழுப்பி சத்தம் போட்டனர், இந்த சத்தம் கேட்டு அங்கு அருகில் இருந்த சில இளைஞர்கள் விரைந்து சென்று ஆற்றில் மூழ்கிய 3 பேரையும் மீட்க முயன்றனர். அவர்களில் விழுப்புரம் மணிமேகலை தெருவை சேர்ந்த ராம்குமார் மகன் சங்கர் (13) என்பவரை மட்டுமே மீட்க முடிந்தது.

அப்போது அவர் மயங்கிய நிலையில் இருந்ததால் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சங்கருக்கு டாக்டர்கள் உரிய சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனிடையே ஆற்றில் மூழ்கிய உதயா, பாலசுப்பிரமணி ஆகிய இருவரைகாப்பாற்ற முடியவில்லை. அவர்கள் இருவரையும் வெகுநேரம் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், இதுபற்றி விழுப்புரம் தாலுகா போலீசாருக்கும், தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

தகவலின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் தீயணைப்புத்துறையினர் அங்கு விரைந்து வந்து பாதுகாப்பு உபகரணங்களுடன் இரவையும் பொருட்படுத்தாமல் தடுப்பணையில் இறங்கி மாயமான 2 மாணவர்களையும் தேடும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேரத்திற்கு பிறகு முதலில் பாலசுப்பிரமணியின் உடலையும், அதன் பின்னர் சிறிது நேரம் கழித்து உதயாவின் உடலையும் தீயணைப்புத்துறையினர் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். அவர்கள் இருவரின் உடலையும் பார்த்து பெற்றோர், உறவினர்கள் கதறி அழுதது அங்கிருந்த காண்போரின் கல்நெஞ்சையும் உருக வைப்பதாக இருந்தது. பின்னர் இருவரின் உடலையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அது குறித்து தாலுகா போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த வடகிழக்கு பருவமழை மற்றும் சாத்தனூர் அணையின் நீர் திறப்பு ஆகியவற்றால் மாவட்டத்தில் உள்ள சில ஆறுகள் பல ஏரி, குளங்கள் நீர் நிரம்பியுள்ள நிலையில் தற்போது பள்ளி விடுமுறை விடப்பட்டுள்ளதால் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பெண்கள் நீர்நிலைகளை நோக்கி குளிப்பதற்கும் துணி துவைப்பதற்கும் செல்லும் நிலை உருவாகியுள்ள நிலையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர் நிலையிலும் கண்காணித்து பாதுகாப்பு பலப்படுத்துவதோடு குளிப்பதற்கு ஏற்றவாறு பாதுகாப்பு தன்மைகளை அந்தந்த ஊராட்சி நிர்வாகம் ஏற்படுத்தித் தர வேண்டும் என சமூக ஆர்வலர்களும் மக்களும் கோரிக்கை எழுப்பி வருகின்றனர்.

Tags:    

Similar News