விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆவணங்கள் மாயம்

Missing Documents -விழுப்புரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் பெண் ஐபிஎஸ் சம்பந்தப்பட்ட வழக்கில் ஆவணங்கள் மாயமான செய்தி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Update: 2022-08-20 02:00 GMT

பைல் படம்.

Missing Documents -விழுப்புரம் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவருக்கு முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. தற்போது இவ்வழக்கில் சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்று வரும் நிலையில் நேற்று முன்தினம் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பு சாட்சிகளான விக்கிரவாண்டி, செங்குறிச்சி, பரனூர் ஆகிய சுங்கச்சாவடிகளில் பணியாற்றி வரும் ஊழியர்கள் 5 பேர் ஆஜராகி சாட்சியம் அளித்தனர். அவர்கள் அளித்த சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டது. இதனிடையே முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., பெண் ஐ.பி.எஸ். அதிகாரியிடம் செல்போனில் பேசிய உரையாடல் பதிவுகள், வாட்ஸ்-அப் பதிவுகள், செல்போன் அழைப்பு பதிவுகள் உள்ளிட்ட சி.பி.சி.ஐ.டி. போலீசாரால் தாக்கல் செய்யப்பட்டிருந்த முக்கிய ஆவணங்களை நீதிபதி புஷ்பராணி கேட்டார்.

அப்போது அந்த ஆவணங்கள் வேறு இடத்தில் வைக்கப்பட்டுள்ளதாக நீதிமன்ற ஊழியர்கள் கூறியுள்ளனர். உடனடியாக அந்த ஆவணங்களை தேடி கண்டுபிடிக்குமாறு நீதிமன்ற ஊழியர்களுக்கும், அந்த ஆவணங்களின் மற்றொரு நகல்களை அடுத்த வழக்கு விசாரணையின்போது சமர்பிக்கும்படி சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கும் நீதிபதி புஷ்பராணி உத்தரவிட்டார்.

மேலும் இவ்வழக்கு விசாரணையை வருகிற 25-ந் தேதிக்கு ஒத்திவைத்தார். இவ்வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசாரால் தாக்கல் செய்யப்பட்ட முக்கிய ஆவணங்கள் மாயமானதாக சமூகவலைதளங்களில் தகவல் வைரலானதால் பெரும் சர்ச்சையும், பரபரப்பும் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் வேறு இடத்தில் மாற்றி வைக்கப்பட்ட ஆவணங்களில் 4 ஆவணங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags:    

Similar News