விழுப்புரத்தில் வீட்டு வசதி வாரிய பொருட்கள் ஜப்தி

நிலம் கையகப்படுத்தப்பட்ட நபருக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்க காலதாமதம் செய்ததால் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய பொருட்கள் ஜப்தி

Update: 2021-10-05 15:40 GMT

இழப்பீட்டுத் தொகை வழங்க காலதாமதம் செய்ததால் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய பொருட்கள் ஜப்தி

விழுப்புரத்தில் நிலம் கையகப்படுத்தப்பட்ட நபருக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்க காலதாமதம் செய்து வந்த விழுப்புரம் வீட்டுவசதி வாரிய அலுவலக பொருள்கள் நீதிமன்ற ஊழியர்கள் மூலம் ஜட்தி செய்யப்பட்டது.

விழுப்புரம் புதுச்சேரி சாலை கீழ்பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஜெயபால், இவருக்கு சொந்தமான 16 ஏக்கர் நிலத்தினை தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் கடந்த 1991ஆம் ஆண்டு கையகப்படுத்தியது. அதற்கான தொகையை சதுர அடிக்கு ஏழு ரூபாய் 35 காசு என நிர்ணயம் செய்து வழங்கியது.

இந்த தொகை போதாது என விழுப்புரம் முதன்மை சார்பு நீதிமன்றத்தில் ஜெயபால் கடந்த 1996 ல் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கின் விசாரணை முடிவுற்று கடந்த 2012 ஆம் ஆண்டு இழப்பீட்டு தொகையாக சதுர அடிக்கு 25 ரூபாய் வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது, இதனை எதிர்த்து வீட்டு வசதி வாரியம் நீதிமன்றங்களுக்கு சென்றது, நீதிமன்றம் சதுர அடிக்கு ரூ.17 தர வீட்டு வசதி வாரியத்திற்கு உத்தவிட்டது,

இந்த உத்தரவின்படி வீட்டுவசதி வாரியம் மீதமுள்ள ரூபாய் 1கோடியே,90 லட்சம் தொகையை வழங்காமல் தற்போதுவரை இழுத்தடிப்பு செய்து வந்தனர். இதனைத் தொடர்ந்து மீண்டும் விழுப்புரம் நீதிமன்றத்தில் முறையிட்ட ஜெயபால் நீதிமன்ற கடந்த 24/9/2021 உத்தரவின்படி இன்று செவ்வாய்க்கிழமை விழுப்புரம் மகாராஜபுரம் பகுதியிலுள்ள வீட்டு வசதி வாரிய அலுவலகத்தில் உள்ள பொருள்களை நீதிமன்ற உத்தரவின்படி நீதிமன்ற ஊழியர்கள் உதவியுடன் ஜப்தி செய்தார். இந்த சம்பவத்தால் இந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தற்போது அரசுக்கு நிலம் அளித்த ஜெயபால் கூறுகையில் தன்னிடமிருந்து 15 லட்சத்திற்கு பெறப்பட்ட நிலத்தை 10 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்வதாகவும் ஆனால் தனக்கு வழங்க வேண்டிய சொற்பத் தொகையை வழங்காமல் இழுத்தடிப்பு செய்வதாகும் இதன் காரணத்தால் பெரும் மன உளைச்சலில் உள்ளதாகவும் ஜெயபால் தெரிவித்தார்.

Tags:    

Similar News