இறந்தவரிடம் ரூ.2 லட்சம் பணம் கொடுத்ததாக மோசடி செய்தவர் மீது புகார்

விழுப்புரத்தில், இறந்த கணவரிடம் பணம் கொடுத்ததாக மோசடி செய்தவர் மீது, இறந்தவர் மனைவி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

Update: 2023-01-22 16:30 GMT

விழுப்புரம் காவல் நிலையம்.

விழுப்புரம் கிழக்கு புதுச்சேரி சாலை மணிமேகலை தெருவை சேர்ந்தவர் அசோக்குமார் மனைவி கவிதா (41). இவர் விழுப்புரம் முத்தாம்பாளையத்தை சேர்ந்த தங்கராசு (57) என்பவருடைய கடையில் 2 கடைகளை வாடகைக்கு எடுத்து 2014 முதல் 2019 வரை ஓட்டல் நடத்தி வந்தார்.

அந்த கடைக்கு முன்பணமாக ரூ.2 லட்சம் கொடுத்திருந்தார். 2019-ல் கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் தங்கராசு, தனது கடைகளை மூடிவிட்டார். அவர், கவிதாவிடம் ஓட்டலை காலி செய்ய சொன்னதால் அவரும் கடையை காலி செய்தார். அப்போது கவிதா, தங்கராசுவிடம் தான் கொடுத்த முன்பணத்தை தரும்படி கேட்டார். ஆனால் தங்கராசு பணம் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததால் கவிதா அப்போது காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

அப்போது தங்கராசு, கவிதாவுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை திருப்பிக்கொடுப்பதாக காவல் நிலையத்தில் கூறிவிட்டு சென்றார். இந்நிலையில் கவிதாவின் கணவர் அசோக்குமார், 2022-ல் இறந்துவிட்டார். இந்த சூழலில் கவிதா, தங்கராசுவிடம் சென்று தனக்கு கொடுக்க வேண்டிய முன்பணத்தை தரும்படி கேட்டார். அதற்கு உங்கள் கணவரிடம் பணம் கொடுத்து விட்டேன் என்று கூறி கவிதாவுக்கு தங்கராசு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து கவிதா, விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் தங்கராசு மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News