விழுப்புரம் மாவட்டத்தில் சலவையகம் தொழில் தொடங்க ஆட்சியர் வேண்டுகோள்

விழுப்புரம் மாவட்டத்தில் சலவையகம் தொழில் தொடங்க மானியத்துடன் நிதி உதவி பெறலாம் என ஆட்சியர் மோகன் தெரிவித்துள்ளார்.

Update: 2022-09-07 14:43 GMT

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன்.

விழுப்புரம்  மாவட்ட  ஆட்சித்தலைவர் மோகன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

2022 23-ம் ஆண்டிற்கான மானிய கோரிக்கையாக பிற்படுத்தப்பட்டோர், வகுப்பை சார்ந்த சார்ந்த மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக சலவைத்தொழிலில் ஈடுபட்டிருந்தபோது கற்கும் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினருக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

குறைந்தபட்சம் 10 நபர்களை கொண்ட குழுவாக அமைத்து, நவீன முறை சலவையகங்கள் ஏற்படுத்திடவும், தொழிலுக்கு அத்தியாவசியமாக தேவைப்படும் உபகரணங்கள், இடைநிகழ் செலவு மற்றும் பணி மூலதனம் ஆகியவைகளுக்காக அதிகபட்சமாக குழு ஒன்றுக்கு ரூ.3 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும்.

இதற்காக தமிழகம் முழுவதும் 25 அலகுகள் ஏற்படுத்த ரூ.75 லட்சம் நிதி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. குழு உறுப்பினர்களின் குறைந்தபட்ச வயது வரம்பு 20 ஆகும். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் மூலம் பயிற்சி பெற்ற நபர்களை கொண்ட குழுவிற்கு முன்னுரிமை வழங்கப்படும். 10 நபர்களை கொண்ட ஒரு குழுவாக இருத்தல் வேண்டும்.

குழுவிலுள்ள பயனாளிகளின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். இத்திட்டத்தில் பயன்பெற விண்ணப்ப படிவம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்ததில் உள்ள ஜே பிரிவை அணுகி பெற்றுக் கொள்ளலாம்.

இதனை மாவட்ட ஆட்சியர் தலைமையிலான தேர்வு குழுவினரால், பூர்த்தி செய்து வரப்பெறும் விண்ணப்பங்களில் தகுதியானவைகளை தெரிவு செய்யப்பட்டு, மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல இயக்ககத்திற்கு அனுப்பி வைக்கப்படும். மேற்காணும் திட்டத்தில் தகுதியானவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News