விழுப்புரத்தில் மாசு கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வு பேரணி

காற்று மாசுபாட்டை தடுப்பது குறித்த பள்ளி மாணவ- மாணவிகளின் விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

Update: 2022-09-08 12:21 GMT

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாக மைதானத்தில் புதன்கிழமை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலம் தூய காற்று மற்றும் நீல வானங்களின் சர்வதேச தினத்தை முன்னிட்டு காற்று மாசுபாட்டினை தடுப்பது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பள்ளி மாணவ- மாணவிகள் பங்கேற்ற பேரணி நடைபெற்றது.

இந்த பேரணியை மாவட்ட கலெக்டர் மோகன், கொடியசைத்து தொடங்கி வைத்து பேசுகையில், சுற்றுப்புறத்தை பாதுகாத்திட நெகிழி பொருட்களை தவிர்த்து மீண்டும் மஞ்சப்பை திட்டம் சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நாம் வாழும் பகுதியை சுகாதாரமாகவும், தூய்மையானதாகவும் மாசில்லாத காற்றை பாதுகாத்திடும் பொருட்டும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது இந்த பேரணி நடைபெற்றுள்ளது. எனவே பொதுமக்கள் சுகாதாரமான சுற்றுப்புறத்தை பாதுகாத்திட அரசின் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.

இதில் மாணவ- மாணவிகள் 300-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக பேரணியாக சென்று காற்று மாசுபாட்டினை தடுப்பது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, துண்டு பிரசுரங்களை வினியோகம் செய்தனர்.

இந்நிகழ்ச்சியில் மாசு கட்டுப்பாட்டு வாரிய மண்டல பொறியாளர் செல்வக்குமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா, விழுப்புரம் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News