திருநங்கைகள் விருது பெற விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர் தகவல்

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருநங்கைகள் விருது பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்

Update: 2023-02-01 15:30 GMT
 ஆட்சியர் த. மோகன்(பைல் படம்)

2022-23-ம் ஆண்டுக்கான சிறந்த திருநங்கை விருது பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தொிவித்துள்ளாா்.

இது குறித்து அவர் விடுத்துள்ள செய்தி குறிப்பு: விழுப்புரம் திருநங்கைகளை சிறப்பிக்கும் வகையில் 2022-2023-ம் ஆண்டுக்கான சிறந்த திருநங்கைக்கான விருது தமிழக முதல்-அமைச்சரால் வழங்கப்பட உள்ளது. இவ்விருது பெறும் சாதனையாளருக்கு ரூ.1 லட்சம் காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்.

இந்த விருது பெற விரும்புபவர்கள் அரசு உதவி பெறாமல் தனது வாழ்க்கையை கட்டமைத்துக்கொண்ட திருநங்கையாக இருத்தல் வேண்டும். திருநங்கைகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் 5 திருநங்கைகள் தங்களது வாழ்வாதார ஆதரவைப்பெறவும், கண்ணியமான வாழ்க்கையை நடத்தவும் உதவி செய்திருக்க வேண்டும். விருதுக்கு விண்ணப்பிப்பவர் தமிழ்நாடு திருநங்கை நலவாரியத்தில் உறுப்பினராக இருத்தல் கூடாது.

மேலும் இவ்விருது பெற விரும்பும் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த தகுதியுடைய திருநங்கைகள், https://awards.tn.gov.in என்ற இணையதள முகவரியில் 1.2.2023 (இன்று) முதல் 28.2.2023 வரை விண்ணப்பித்து விரிவான கருத்துருக்களை விழுப்புரம் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் 28.2.2023 மாலை 5 மணிக்குள் கொடுக்க வேண்டும்.

விருது பெற தகுதியுள்ளவர் இதற்கென தமிழக அரசால் நியமிக்கப்பட்ட தேர்வுக்குழுவால் தேர்வு செய்யப்படுவர் என தெரிவித்துள்ளார்.

அரசு திருநங்கைகளை கௌரவப்படுத்தும் விதமாக அவர்களுக்கு தேவையான சமூக பாதுகாப்பு இருப்பிடம் தொழில் முனைவு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது அதனால் சென்ற காலங்களில் மக்களால் ஒதுக்கப்பட்டு இருந்த திருநங்கைகள் தற்போதைய காலத்தில் கௌரவமான நிலையை அடைவதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது அதில் இது போன்ற விருதுகளும் அவர்களுக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் உள்ளது என சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags:    

Similar News