ஏல சீட்டு மோசடி: பாதிக்கப்பட்டவர்கள் எஸ்.பியிடம் புகார்
விழுப்புரம் நகரத்தில் ரூ.5 கோடி அளவில் ஏல சீட்டு மோசடி நடத்தி ஓடிப்போனவர்கள் மீது நடவடிக்க எடுக்க எஸ்பியிடம் புகார் மனு அளித்தனர்;
ஏலசீட்டு மோசடி குறித்து காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்திருந்த பாதிப்பட்டவர்கள்
விழுப்புரம் மகாராஜபுரம், வண்டிமேடு, விராட்டிக்குப்பம், சேவியர் காலனி, பெரியகாலனி, காமராஜர் வீதி, தக்கா தெரு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுத்தனர்.
அந்த மனுவில், விழுப்புரம் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே தனியார் நிதி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வந்தது. அந்நிறுவனம் 6 மாதம், ஒரு வருடம் என்ற 2 திட்டங்களின் கீழ் ஏலச்சீட்டு நடத்தி வந்தது. அதில் விழுப்புரம் நகரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பலர், உறுப்பினராக சேர்ந்து ஏலச்சீட்டு செலுத்தி வந்தோம்.
ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.4 லட்சம் வரை ஏலச்சீட்டு கட்டினோம். அந்த நிறுவனத்தின் ஊழியர்களே எங்களிடம் நேரடியாக வந்து பணம் வசூலித்து சென்றனர். ரூ.5 கோடி மோசடி கடந்த 2 மாதமாக அந்நிறுவன ஊழியர்கள் யாரும் எங்களிடம் பணம் வசூலிக்க வரவில்லை.
இதனால் சந்தேகமடைந்த நாங்கள், அந்நிறுவன மேலாளரை தொடர்பு கொண்டபோது, அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. உடனே அந்நிறுவனத்திற்கு நேரடியாக சென்று பார்த்தபோது அந்நிறுவனத்தை காலிசெய்து விட்டு சென்றிருந்தை அறிந்து அதிர்ச்சியடைந்தோம்.
எங்களைப்போன்று இதுவரை சுமார் 500 பேரிடம் இருந்து ஏலச்சீட்டு பணம் பெற்று ரூ.5 கோடி வரை அந்நிறுவனத்தினர் மோசடி செய்து விட்டனர். எனவே சம்பந்தப்பட்ட அந்நிறுவனத்தினர் மீது உரிய நடவடிக்கை எடுத்து எங்களுக்கு சேர வேண்டிய பணத்தை மீட்டுத்தரவேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர்.
மனுவை பெற்ற காவல் கண்காணிப்பாளர் இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.