விழுப்புரம் அருகே அய்யனாரப்பன் கோவில் சாமி சிலைகள் உடைப்பு

விழுப்புரம் அருகே அய்யனாரப்பன் கோயில் சிலைகள் உடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2022-01-23 14:40 GMT

அய்யனாரப்பன் கோவிலில் உடைக்கப்பட்ட சுவாமி சிலைகள்.

விழுப்புரம் அருகே நன்னாடு கிராமத்தில் பழமைவாய்ந்த அய்யனாரப்பன் கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவிலில் பூசாரியாக தோகைப்பாடி கிராமத்தை சேர்ந்த ராமச்சந்திரன் (வயது 48) என்பவர் பூஜை செய்து வருகிறார்.இவர் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் பூஜைகள் முடிந்ததும் கோவில் வளாகத்தில் உள்ள சாமிகளுக்கு தீபம் ஏற்றிவிட்டு கோவில் கதவை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். நேற்று காலை கோவிலை திறந்து பூஜை செய்வதற்காக ராமச்சந்திரன் வந்தார்.

அப்போது கோவில் வளாகத்தில் உள்ள அய்யனாரப்பன் சாமி சிலையின் பகுதிகள் மற்றும் பச்சை கிளிகள், முன்புறமுள்ள காவலர் சிலையின் கைப்பகுதி, குதிரை சிலையின் நாக்கு உள்ளிட்டவை உடைந்து சேதம் அடைந்திருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இரும்பு கிரில் கேட் அருகே உள்ள உண்டியலை உடைக்க முயன்றுள்ளனர், முடியாததால் கோவிலின் உள்பகுதியில் கற்களை வீசியெறிந்து சாமி சிலைகளை சேதப்படுத்தி உள்ளனர்.

இதுகுறித்து கோவில் பூசாரி ராமச்சந்திரன், விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவதோடு சாமி சிலைகளை சேதப்படுத்திய மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News