விழுப்புரம் மாவட்டத்தில் உரங்களின் இருப்பை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்: கலெக்டர்

விழுப்புரம் மாவட்டத்தில் விவசாய உரங்களின் இருப்பை அதிகாரிகள் அடிக்கடி உறுதி செய்யும் பணியை செய்ய வேண்டும் என கலெக்டர் தெரிவித்தார்.

Update: 2022-07-22 09:45 GMT

வேளாண்மை உற்பத்தியாளர்கள் குழுக்கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், (22.07.2022) வேளாண்மைத்துறையின் மூலம், வேளாண்மை உற்பத்தியாளர்கள் குழுக்கூட்டம் நடைபெற்றது. இக்குழுக்கூட்டத்தில், உற்பத்தியாளர் குழு உறுப்பினர் மற்றும் விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி முன்னிலை வகித்தார். மாவட்ட ஆட்சித்தலைவர் (பொ) பரமேஸ்வரி தலைமை தாங்கி வேளாண்மைத்துறை மற்றும் மற்றும் அதன் ஒருங்கிணைந்த துறைகள் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ள திட்டங்கள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் குறித்து ஆய்வு செய்து அது குறித்து கேட்டறிந்தார்.

மேலும், இந்த ஆய்வின்போது, கூட்டுறவுத்துறைகள் மூலம் தொடக்க வேளாண் சங்கங்களில் விவசாயிகளுக்கு போதிய அளவு உரங்கள் இருப்பு வைக்கப்படுவதை அலுவலர்கள் அவ்வப்பொழுது உறுதி செய்து கொள்ள வேண்டும். தோட்டக்கலைத்துறையின் மூலம், ஆடிப்பட்டத்தில், விவசாயிகள் மேற்கொள்ளும் காய்கறி பயிர் சாகுபடிகளுக்கு போதிய விதைகள், நாற்றுகள் வழங்கிட வேண்டும். விக்கிரவாண்டி பகுதியில் விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் பட்டுப்பூச்சி வளர்ப்பிற்கு தேவையான பயிற்சி வழங்குவதுடன், பட்டு வளர்ப்பிற்கு விவசாயிகளுக்கு பட்டு வளர்ப்புத்துறையின் மூலம் கூடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.

அதேபோல், வேளாண் விற்பனைத்துறையின் மூலம், உழவர் உற்பத்தியாளர் குழு முழு நேரம் செயல்பட்டு விவசாயிகள் பயன்பெறும் வகையில் செயல்படுத்திட வேண்டும் என அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் (பொ) பரமேஸ்வரி அறிவுறுத்தினார். தொடர்ந்து, தோட்டக்கலைத்துறையின மூலம், விவசாயிகளுக்கு வேளாண் கருவிகள் வழங்குதல் மற்றும் வேளாண் பயிற்சி குறித்த கையேட்டினை வெளியிட்டு, விவசாயிகளுக்கு வழங்கினார்.

இக்கூட்டத்தில், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் (பொ) சண்முகம், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் காரல் மார்க்ஸ், வேளாண் துணை இயக்குநர் (திட்டம்) பெரியசாமி மற்றும் விவசாய உற்பத்தியாளர் குழு உறுப்பினர்கள் கலிவரதன், ராஜேந்திரன், ஏழுமலை, சமயமூர்த்தி, சுப்புராயலு, முத்துமல்லா, சம்பத்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News