தலைவர்கள் சிலை அமைக்கப்படும் என்ற அறிவிப்பிற்கு பாமக வரவேற்பு

தமிழகத்தில் தலைவர்களின் சிலைகள் அமைக்கப்படும் என்ற தமிழக அரசின் முடிவை பாமக வரவேற்பதாக அதன் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்;

Update: 2021-09-08 05:19 GMT

இது குறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ட்விட்டரில் விடுதலைப் போராட்ட வீராங்கனை கடலூர் அஞ்சலை அம்மாளுக்கு கடலூரில் சிலை அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. விடுதலைப் போரில் அஞ்சலையம்மாள் அனுபவித்த துயரங்களுக்கும், செய்த தியாகங்களுக்கும் இது சிறந்த அங்கீகாரம். இது வரவேற்கத்தக்கது.

கொடுங்கோலன் நீலன் சிலையை அகற்றுவதற்காக எந்த மண்ணில் அஞ்சலையம்மாள் போராடினாரோ, அதே மண்ணில் அவருக்கு சிலை அமைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. அஞ்சலை அம்மாளுக்கு நினைவு மண்டபமும் அமைக்கப்பட வேண்டும் என்பதே பா.ம.க.வின் கோரிக்கை.

வயிற்றில் கருவை சுமந்த நிலையில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடி சிறைக்கு சென்ற வீரப்பெண்மணி, மகாத்மா காந்தியால் தென்னாட்டு ஜான்சி ராணி என்று பாராட்டப்பட்ட கடலூர் அஞ்சலை அம்மாளின் பெருமைகளையும், வரலாற்றையும் இளைய தலைமுறைக்கு கொண்டு சேர்க்க வேண்டும்!

தமிழகத்தின் பிற பகுதிகளில் அப்துல் கலாம், இரவீந்திரநாத் தாகூர், மருது சகோதரர்கள், ப. சுப்பராயன், மு.வரதராசனார், முத்துலட்சுமி ரெட்டி, மூவலூர் இராமாமிர்தம் அம்மாள் உள்ளிட்டோருக்கு சிலை அமைக்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பும் வரவேற்கத்தக்கது என அவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News