செஞ்சி அருகே பங்குதாரரை எரிக்க முயன்றதால் பரபரப்பு

செஞ்சியில் பர்னிச்சர் கடை பங்குதாரர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரிக்க முன்யறதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2022-07-11 07:47 GMT

பைல்படம்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள தென்களவாய் கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார்(வயது 50). இவரும், அதே ஊரை சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் மதியழகன் என்பவரும் சேர்ந்து கடந்த 2019-ம் ஆண்டு செஞ்சி அடுத்த நாட்டார்மங்கலத்தில் பர்னிச்சர் கடை வைத்து நடத்தி வந்தனர். கடை தொடங்கிய 5 மாதம் மட்டுமே ராஜ்குமார் கடைக்கு சென்று வந்தார்.

இதனிடையே ராஜ்குமாருக்கும், மதியழகனுக்கும் இடையே கருத்து வேறுபாடு மற்றும் சிறு, சிறு பிரச்சினை ஏற்பட்டு வந்தது. இதனால் ராஜ்குமார், கடைக்கு செல்லவில்லை. இதனிடையே ராஜ்குமார், மதியழகனிடம் கடையை நீயே பார்த்துக்கொள்ளுமாறும், கடைக்கு வாங்கிய கடனை கட்டிக் கொள்ளுமாறும் கூறியுள்ளார். ஆனால் மதியழகன் கடனை கட்டவில்லை என தெரிகிறது.

இதையடுத்து கடந்த 5-ந்தேதி ராஜ்குமார் மற்றும் அவரது மனைவி சரிதா ஆகியோர் நாட்டார்மங்கலத்தில் உள்ள பர்னிச்சர் கடைக்கு சென்று, மதியழகனிடம் ஏன் 8 மாதமாக கடனை கட்டவில்லை என்று கேட்டுள்ளனர். இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.இதில் ஆத்திரமடைந்த மதியழகன், கடையில் வைத்திருந்த பெட்ரோலை எடுத்து ராஜ்குமார் மீது ஊற்றி தீ வைத்தார். இதில் அவரது உடலில் தீப்பற்றி எரிந்தது. உடனே சரிதா, தனது கணவரை காப்பாற்ற முயன்றார். அவர் மீதும் தீ பரவியது. இதில் சுதாரித்துக்கொண்ட ராஜ்குமார், அருகில் இருந்த தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தார். இதில் தீக்காயமடைந்த சரிதா, திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சரிதாவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து ராஜ்குமார் செஞ்சி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் மதியழகன் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பர்னிச்சர் கடையில் பங்குதாரரை எரித்துக் கொல்ல முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News