திமுகவினருக்கு மட்டும் டெண்டர் வழங்கப்படுவதாக அதிமுக, பாமக சாலை மறியல்
செஞ்சி அருகே வல்லத்தில், திமுகவினருக்கு மட்டும் டெண்டர் வழங்கப்படுவதாக கூறி அதிமுக, பாமக சாலை மறியல் செய்தனர்.;
திமுகவினருக்கு மட்டும் டெண்டர் வழங்கப்படுவதாக வல்லம் வட்டார வளர்ச்சி அலுவலரை கண்டித்து வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரே செஞ்சி திண்டிவனம் சாலையில் அதிமுக மற்றும் பாமகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தமிழக அரசு சார்பில் கிராமங்களில் சாலை வசதி, நெல் களம் அமைத்தர், குடி நீர் தொட்டி அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கான நிதிகள் ஒதுக்கப்பட்டு டெண்டர்கள் விடப்பட்டுள்ளது. இந்த பணிகள் அனைத்தும் திமுகவினருக்கு மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறி அதிமுக மற்றும் பாமகவினர் வட்டாட்சியர் அறையில் வட்டாட்சியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது திமுகவினருக்கும் பாமகவினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்ப்பட்டது. இதுகுறித்து அதிமுகவினர் கூறுகையில் பணிகள் அனைத்தும் திமுக கட்சியை சேர்ந்த ஒப்பந்ததாரர்களுக்கு மட்டுமே வட்டார வளர்ச்சி அலுவலர் வழங்குவதாக புகார் தெரிவித்தனர். மேலும் தங்கள் கிராமங்களில் நடைபெறும் அரசு சார்ந்த வேலைகளுக்கு பணி வழங்க வேண்டும் என மனு அளித்தாலும் மனுக்களை ஊரக வளர்ச்சி அலுவலர்கள் வழங்குவதில்லை என புகார் தெரித்தனர்.
மேலும் ஒப்பந்த பணிகளில் அதிமுக, பாமக வினரை புறக்கணிக்கும் வல்லம் வட்டார வளர்ச்சி அலுவலரை கண்டித்து செஞ்சி திண்டிவனம் சாலையில் முன்னாள் வல்லம் ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் பன்னீர்செல்வம் தலைமையில் மகளிக் அணியை சேர்ந்த ஆனந்திஅண்ணாதுரை, பாமக முன்னாள் மாவட்ட செயலர் மணிமாறன், பாமக இளைஞர் அணி சரவணன், நிர்வாகிகள் கோபால் உள்ளிட்ட ஏராளமான அதிமுக, பாமக நிர்வாகிகள் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதை தொடர்ந்து செஞ்சி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சு வார்த்தை நடத்தி மறியலை கைவிடச் செய்தனர்.