ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து 50 பவுன் நகை திருட்டு

அணைக்கட்டு அருகே பூட்டியிருந்த வீட்டில் பூட்டை உடைத்து 50 பவுன் நகை திருட்டு. போலீசார் விசாரணை

Update: 2021-09-02 13:54 GMT

கொள்ளையடிக்கப்பட்ட வீட்டில் பொருட்கள் சிதறி கிடந்தன

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா பள்ளிகொண்டா சின்ன வாணிதெரு என்கின்ற வள்ளியம்மை தெருவில் வசித்து வருபவர் கவுரி (வயது 60). இவரது கணவர் பழனி ஆசிரியராக பணியாற்றி இறந்து விட்டார்

இவர்களுக்கு தனஞ்செழியன் மற்றும் நிரஞ்சன் என்ற 2 மகன்கள் உள்ளனர். தனஞ்செழியன் சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார். அவரை பார்ப்பதற்காக தன் கவுரி வீட்டை பூட்டி விட்டு இளைய மகன் நிரஞ்சனுடன் கடந்த 28-ந் தேதி சென்னை சென்றார்.

பின்பு தன் வீட்டிற்கு திரும்பி வந்தபோது வீட்டின் முன்பக்க இரும்பு கேட் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் கதவைத் திறந்து வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டினுள் இருந்த பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த துணிமணிகளை சிதறி போட்டு 50 பவுன் நகைகளை மர்மநபர்கள் திருடிச் சென்றிருந்தனர்.

இதுகுறித்து அவர்கள் பள்ளிகொண்டா போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சுபலட்சுமி சப்-இன்ஸ்பெக்டர்கள் கண்ணன் சிங்காரம் மற்றும் போலீசார் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

திருட்டு நடந்த வீட்டை வேலூர் மாவட்ட போலீஸ் துணை சூப்பிரண்டு ஆல்பர்ட்ஜான் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பின்னர் குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலு தலைமையிலான போலீசார் மோப்ப நாயுடன் திருட்டு சம்பவம் நடந்த வீட்டிற்கு வந்து விசாரணை நடத்தினர். இதனை அடுத்து கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு வந்து கைரேகைகளை பதிவு செய்தனர். இது குறித்து பள்ளிகொண்டா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News