கண்ணமங்கலம் அருகே மூதாட்டியை தாக்கி தங்க சங்கிலி பறிப்பு

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே மூதாட்டியை தாக்கி தங்க சங்கிலி பறித்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2022-07-11 07:33 GMT

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே கீழ்பள்ளிப்பட்டு கிராமத்தில் மீராசப்பேட்டை பகுதியில் தென்னந்தோப்புகள் உள்ளன. பள்ளிப்பட்டு கிராமத்தில் வசிக்கும் சுசிலா அம்மாள் (வயது 66) என்பவர் தனக்கு சொந்தமான தென்னந்தோப்பில் இன்று அதிகாலை தேங்காய் மட்டைகளை எடுக்க சென்றார்.

அப்போது பின்னால் வந்த மர்ம நபர்கள் சிலர் சுசிலா அம்மாளை தாக்கி கழுத்தில் இருந்த 2 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு, அருகே இருந்த கிணற்றில் அவரை தள்ளி விட்டு தப்பி ஓட்டம் பிடித்தனர். நீச்சல் தெரிந்த சுசிலாஅம்மாள் அங்கிருந்த படிக்கட்டு வழியாக மேலே வந்து வீடு சென்றார்.

வீட்டில் இருந்த மகன் ஜெயசங்கர் மற்றும் உறவினர்களிடம், நடந்த சம்பவம் குறித்து அவர் கூறினார். பின்னர் அவர் சிகிச்சைக்காக அரியூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்த கண்ணமங்கலம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் சுசிலா அம்மாளை தாக்கி, நகைகளை பறித்து சென்றவர்கள் யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News