கண்டெய்னர் லாரியில் 96 கார் டயர்களை திருடியவர் கைது

போளூர் அருகே லாரி கதவை உடைத்து 96 கார் டயர்களை திருடிய லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-08-01 13:13 GMT

கண்டெய்னர் லாரியில் டயர் திருடிய பழனிசாமியுடன் போலீசார் உள்ளனர்.

சென்னை ராயபுரத்தில் இயங்கும் டிரான்ஸ்போர்ட் மூலம் ஆந்திர மாநிலத்தில் ஸ்ரீ சிட்டி என்ற ஊரில் இருந்து 607 கார் டயர்களை ஏற்றிக்கொண்டு கோவைக்கு கண்டெய்னர் லாரி ஒன்று சென்றது. லாரியை திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே உள்ள குப்புசாமி என்ற டிரைவர் ஓட்டி வந்தார். கடந்த 25-ந் தேதி இரவு போளூர் பைபாஸ் சாலை அருகே உள்ள பாக்மார்பேட்டை கூட்ரோட்டில் ஒரு ஓட்டலில் சாப்பிட்டு விட்டு லாரியில் குப்புசாமி படுத்து தூங்கினார்.

மறுநாள் காலை எழுந்து பார்த்த போது லாரி பின்புறம் கதவின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 96 டயர்களை திருடி சென்றது தெரியவந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ.5 லட்சமாகும்.

இதுகுறித்து குப்புசாமி டிரான்ஸ்போர்ட் நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தார். உடனே அவர் போளூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் ஜெயஸ் பிரகாஷ், ஐயப்பன், சப்- இன்ஸ்பெக்டர் சிவகுமார், சிறப்பு உதவி ஆய்வாளர் சங்கர், மற்றும் காவலர் சரவணன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் காலை இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ் தலைமையிலான போலீசார் போளூர் அருகே கூட் ரோட்டில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வேகமாக வந்த லாரியை மடக்கி சோதனை செய்த போது அதில் 96 டயர்கள் இருந்தன.

விசாரணை செய்ததில் லாரியை ஓட்டி வந்தவர் சென்னை திருவொற்றியூரை சேர்ந்த பழனிச்சாமி (வயது 46) என்பது தெரியவந்தது. குப்புசாமி ஓட்டி வந்த லாரியில் இருந்த டயர்களை திருடியதை அவர் ஒப்புக்கொண்டார். அவரை போலீசார் கைது செய்து 96 டயர்களையும் பறிமுதல் செய்தனர் அவர் ஓட்டி வந்த லாரியையும் பறிமுதல் செய்தனர்.

பழனி சாமிக்கு உதவியாக இருந்ததாக சென்னையைச் சேர்ந்த டேவிட், முத்து ஆகிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். கைதான பழனிசாமி இதுபோல் கன்டெய்னர் லாரிகளில் பூட்டை உடைத்து பல பொருட்கள் திருடியதாக கூறப்படுகிறது. போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News