திருவண்ணாமலை மாவட்டத்தில் குடியரசு தின சிறப்பு கிராம சபைக் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்றது.

Update: 2024-01-27 01:33 GMT

செய்யாற்றில் ஜோதி எம்எல்ஏ தலைமையில் நடைபெற்ற கிராம சபை கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் குடியரசு தின சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்றது.

வந்தவாசி

வந்தவாசி மற்றும் தெள்ளாா் ஊராட்சி ஒன்றியங்களுக்குள்பட்ட ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்றது.

தெள்ளாா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட இராமசமுத்திம் ஊராட்சியில் நடைபெற்ற கூட்டத்துக்கு, ஊராட்சி மன்றத் தலைவா் சீதாலட்சுமி தலைமை வகித்தாா். தெள்ளாா் ஒன்றியக்குழுத் தலைவா் கமலாட்சி இளங்கோவன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் வெங்கடேசன், சீனிவாசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

வந்தவாசி தொகுதி எம்எல்ஏ அம்பேத்குமாா் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினாா். அப்போது, இராமசமுத்திரம் கிராம மக்கள் சிகிச்சை பெற 12 கி.மீ. தொலைவில் உள்ள பொன்னூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு செல்ல வேண்டியுள்ளது. எனவே, 5 கி.மீ. தொலைவில் உள்ள நல்லூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் கீழ் இராமசமுத்திரம் கிராமத்தை இணைக்க வேண்டும், சேதமடைந்துள்ள அங்கன்வாடி, நியாய விலைக் கட்டடங்களை அகற்றிவிட்டு புதிய கட்டடங்கள் கட்டித் தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அம்பேத்குமாா் எம்எல்ஏ உறுதி அளித்தாா்.

செய்யாறு

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், சிறுவஞ்சிப்பட்டு கிராமத்தில், தமிழ்நாடு அரசு ஊரக வளா்ச்சி, ஊராட்சி துறை சாா்பில் நடைபெற்ற கூட்டத்துக்கு, வெம்பாக்கம் ஒன்றியக் குழுத் தலைவா் மாமண்டூா் .ராஜி தலைமை வகித்தாா். வெம்பாக்கம் மேற்கு ஒன்றியச் செயலாளா் தினகரன், ஊராட்சி மன்றத் தலைவா் ராஜேஸ்வரி தினகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், சிறப்பு விருந்தினராக ஜோதி எம்எல்ஏ பங்கேற்றாா். கூட்டத்தில், கிராம வளா்ச்சி குறித்த தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நிகழ்ச்சியில், ஒன்றியக் குழு உறுப்பினா் குணாநிதி, திருவத்திபுரம் நகராட்சி உறுப்பினா் காா்த்திகேயன், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் கருணாகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

போளூா்:

சேத்துப்பட்டு வட்டம், தேவிகாபுரம் ஊராட்சியில் நடைபெற்ற கூட்டத்துக்கு, ஊராட்சி மன்றத் தலைவா் வெங்கிடேசன் தலைமை வகித்தாா். கூட்டத்தில், 2024-2025-ஆம் ஆண்டுக்கான வளா்ச்சித் திட்டப் பணிகள், சுத்தம், சுகாதாரம், சாலை வசதி, தூய்மையான குடிநீா் உள்ளிட்ட பல்வேறு வளா்ச்சித் திட்டம் குறித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. தேவிகாபுரம் மகாராஜபேட்டைதெருவில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட மன்னாா்சாமி கோயில் இடத்தை மீட்டுதரக் கோரி இந்து முன்னணி தேவிகாபுரம் கிளை சாா்பில் ஊராட்சி மன்றத் தலைவா் வெங்கிடேசனிடம் மனு அளித்தனா். முன்னதாக, ஊராட்சி செயலா் சங்கா் வரவேற்றாா்.

இதில், ஊராட்சி மன்றத் துணைத் தலைவா் மல்லிகா திருநாவுக்கரசு ,  ஒன்றியக்குழு உறுப்பினா்கள் கணேசன் ,  ராதா சின்னகாசி, கிராம நிா்வாக அலுவலா் ஆனந்த் பாபு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Tags:    

Similar News