செய்யாறு அருகே குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியல்

திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யாறு அருகே ஒருமாதமாக குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்

Update: 2021-09-08 13:33 GMT

குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யாறு-ஆரணி சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. பெரும்பள்ளம் கிராமப்பகுதியில் சாலை விரிவாக்கத்திற்காக சாலையோரம் பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது பூமிக்கடியில் சென்ற குடிநீர் குழாய் சேதமடைந்துள்ளது. அதனால் கிராமத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு கடந்த ஒரு மாதமாக குடிநீர் வினியோகம் தடைப்பட்டுள்ளது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் கேட்டதற்கு பைப்லைனை சேதப்படுத்திய நெடுஞ்சாலை துறையினர்தான் அதனை சரிசெய்து தரவேண்டும். ஊராட்சி நிதியிலிருந்து அதனை சரிசெய்ய முடியாது என கூறியதாக தெரிகிறது.

இந்தநிலையில் ஒருமாதமாகியும் தங்கள் பகுதிக்கு குடிநீர் வழங்கப்படாததால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் ஆத்திரமடைந்து, ஊராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் விநியோகிக்கப்படாததை கண்டித்து 100-க்கும் மேற்பட்டோர் இன்று காலி குடங்களுடன் செய்யாறு - ஆரணி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் அரைமணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்ததும் செய்யாறு துணை காவல் கண்காணிப்பாளர் செந்தில் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு, விரைவில் குடிநீர் வழங்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததின் பேரில் பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News