திருவண்ணாமலை மாவட்டத்தில் 7வது கட்ட தடுப்பூசி முகாமில் 78,097 பேருக்கு தடுப்பூசி

திருவண்ணாமலை மாவட்டத்தில் 1,075 இடங்களில் நடைபெற்ற 7வது கட்ட தடுப்பூசி முகாமில் 78,097 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது

Update: 2021-10-31 02:12 GMT

திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷ் 

தமிழக அரசு கொரோனா தொற்று பரவலை தடுக்க மாநிலம் முழுவதும் செப்டம்பர் மாதம் 12-ந்தேதி முதல் தொடர்ந்து 6 வாரங்களாக கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.  இதன் மூலம் திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 லட்சத்து 92 ஆயிரத்து 739 பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டது .   

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ்  வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மாவட்டத்தில்   7-வது கட்ட கொரோனா தடுப்பூசி முகாம்  1,075 இடங்களில் நடைபெற்றது. கண்காணிப்பு குழு அலுவலர்கள் முகாம் வாரியாக நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த தடுப்பூசி போடும் பணியில் அனைத்துத்துறை அதிகாரிகளும், ஊழியர்களும் சுகாதாரத்துறையினருடன் இணைந்து பணியாற்றினர்.

கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் குறித்த பட்டியல் அடிப்படையில் அங்கன்வாடி பணியாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர் வீடு, வீடாக சென்று தடுப்பூசி போட்டு கொள்ளாதவர்களை முகாமிற்கு அழைத்து வந்தனர்.  திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று 1,075 இடங்களில் நடந்த தடுப்பூசி முகாம்களில் 78 ஆயிரத்து 97 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News