நோய் பரப்பும் இடமாக மாறிய வாணியம்பாடி அரசு மருத்துவமனை

வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சுற்றி கழிவு நீருடன் மழை நீரும் கலந்து ஓடுவதால், நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Update: 2021-09-22 10:45 GMT

மருத்துவமனைக்கு மழைநீரில் நடந்து செல்லும் பொதுமக்கள்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நூறுலாஸ்பேட்டை பகுதியில் அரசு மருத்துவமனை  உள்ளது‌. இந்த அரசு மருத்துவமனையில் வாணியம்பாடி சுற்றி உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கானோர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்

இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக வாணியம்பாடி பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் திருப்பத்தூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக வாணியம்பாடியில் 107 மில்லி மீட்டர் மழை பதிவானது. இதன் காரணமாக அரசு மருத்துவமனை வளாகத்தில் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து மருத்துவமனை வளாகம் முழுவதும் ஆறாக தண்ணீர் ஓடுகிறது

மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கர்ப்பிணித் தாய்மார்கள், குழந்தைகள், கண் சிகிச்சைக்காக வரக்கூடிய முதியோர்கள், விபத்து ஏற்பட்டு படுகாயங்களுடன் வரக்கூடிய நபர்கள் தண்ணீரிலேயே தத்தளித்து செல்லக்கூடிய நிலை உருவாகியுள்ளது. மேலும் கழிவுநீர் கால்வாய்களை நகராட்சி நிர்வாகம் முறையாக தூர் வராததால் மருத்துவமனை வளாகத்தில் கழிவுநீர் மருத்துவமனை வளாகத்தை சுற்றி தேங்கி நிற்கிறது.

ஏற்கனவே மழைக்காலங்களில் மலேரியா, டெங்கு காய்ச்சல் என பரவக்கூடிய நிலையில்  தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா பெரும் தொற்றால் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில் மருத்துவமனைக்கு நோயாளிகள் அச்சத்துடன் வந்து செல்லக்கூடிய நிலை உருவாகி உள்ளது மேலும் மருத்துவமனைக்கு தங்களுடைய சிகிச்சைக்காக வரக்கூடிய மக்கள் மருத்துவமனையிலிருந்து நோய்த்தொற்று ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. அதே சமயத்தில் இந்த அரசு மருத்துவமனையில் பணியாற்றுவதற்கு மருத்துவர்களே அச்சப்பட்டு வரக்கூடிய நிலை உருவாகியுள்ளது எனவே

உடனடியாக மாவட்ட நிர்வாகம்  மருத்துவமனை வளாகத்தில் தேங்கி இருக்கும் தண்ணீர் மற்றும் கழிவுநீர் கால்வாயை தூர்வாரி தண்ணீரை வெளியேற்ற வேண்டும் என நோயாளிகள் மற்றும் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Tags:    

Similar News