ஊராட்சி மன்ற தலைவர் பதவியை பொதுபிரிவினருக்கு ஒதுக்க கோரிக்கை

ஆம்பூர் அருகே ஊராட்சி மன்ற தலைவர் பதவியை பொதுபிரிவினருக்கு ஒதுக்க கோரி மலைகிராம மக்கள் கோரிக்கை மனு அளித்துள்ளனர்

Update: 2021-09-21 12:30 GMT

வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்த கிராம மக்கள்

தற்பொழுது 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. அதற்காக வேட்புமனு தாக்கல் கடந்த 15 ஆம் தேதியில் இருந்து வருகிற 22-ஆம் தேதி வரை நடைபெறும். பல்வேறு ஊராட்சிகளில் மனுக்கள் பெற்று அனைவரும் தீவிரமாக மனு தாக்கல் செய்து வருகின்றனர். 

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் ஒன்றியத்துக்குட்பட்ட நாயக்கனேரி மலை கிராமத்தில் 3 ஆயிரத்து 440 வாக்காளர்கள் உள்ளனர்.

நாயக்கனேரி மலை கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் பதவி ஆதிதிராவிடர் வகுப்பைச் சார்ந்த பெண்களுக்கு  ஒதுக்கப்பட்டுள்ளது.. மேலும் இந்த ஊராட்சியில் உள்ள 9 வார்டுகளுக்கு பழங்குடியினர் மற்றும் பொதுப் பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று நாயக்கனேரி மலை கிராமத்தை சேர்ந்த சுமார் 300க்கும் மேற்பட்டோர் வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்து வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணியிடம் தங்களுடைய கிராமத்தில் அதிகமானோர் பழங்குடியினர் மற்றும் பிற வகுப்பை சேர்ந்தவர்கள் மட்டுமே உள்ளதாகவும், இந்த கிராமத்தில் ஆதிதிராவிடர் சேர்ந்தவர்கள் யாரும் இல்லை என்று கூறி பிற வகுப்பை சேர்ந்தவர்களுக்கு ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட ஒதுக்க வேண்டுமென கோரி மனு ஒன்றை அளித்துள்ளனர்.

இந்த மனுவை பெற்றுக்கொண்ட வருவாய்க் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி இதன் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி அவர்களை அனுப்பி வைத்தார்.  அதன் பின்னர் அங்கிருந்து கிராம மக்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.

இந்த நிலையில் 9-வார்டு உறுப்பினர்களும் மனுக்கள் பெறாமல் வேட்புமனு தாக்கல் செய்யப்படாமல் இன்றுவரை புறக்கணித்து வருகின்றனர்.

Tags:    

Similar News