வாணியம்பாடி அருகே அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி: ஒருவர் கைது
வாணியம்பாடி அருகே அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ5 லட்சம் மோசடியில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டார். மற்றொருவர் தலைமறைவு.;
வாணியம்பாடியில் பணமோசடி தொடர்பாக கைது செய்யப்பட்டவர்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே ராமநாயக்கன்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் கருணாகரன். இவர் தனது உறவினர் சுதாகர் என்பவருக்கு வனத்துறையில் வேலை வாங்கி தருவது தன்னுடைய நண்பரான வேலூரை சேர்ந்த ஜோதிவேல் மூலம் கடந்த 2018 ம் ஆண்டு கோயம்புத்தூரை சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவரின் வங்கி கணக்கில் ரூ.5 லட்சம் செலுத்தியுள்ளார்.
பணம் பெற்றபின் பாலசுப்பிரமணியனை பலமுறை தொடர்பு கொண்டும் வேலை சம்பந்தமாக கேட்ட போது சரியாக பதில் கொடுக்கவில்லை. பின்னர் சில நாட்களுக்கு முன்பு பாலசுப்ரமணியம் தன்னுடைய போன் சுவிட்ச் ஆப் செய்துள்ளார். இதனால் தான் ஏமாற்றம் அடைந்ததை அறிந்த கருணாகரன் கடந்த 25.10.2021 அன்று திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணம் மோசடி குறித்து ஜோதிவேல், பாலசுப்ரமணியம் ஆகிய இருவர் மீது புகார் அளித்துள்ளார்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் காவல் ஆய்வாளர் நாகராஜன், அம்பலூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராமமூர்த்தி ஆகியோர் தலைமையில் போலீசார் 2 பேரையும் தேடி வந்த நிலையில் வேலூரை சேர்ந்த ஜோதிவேலை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் தலைமறைவாக உள்ள கோயம்பத்தூர் பகுதியை சேர்ந்த பாலசுப்ரமணியம் என்பவரை அம்பலூர் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.