வாணியம்பாடியில் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் நூதன போராட்டம்

வாணியம்பாடி நீதிமன்ற வளாகத்தில் தேங்கி இருக்கும் மழை நீரை அகற்ற கோரி  தண்ணீரில் காகித கப்பலை விட்டு வழக்கறிஞர்கள் நூதன போராட்டம்

Update: 2021-09-20 10:07 GMT

மழைநீரில் காகித கப்பல் விட்டு நூதனமுறையில் போராட்டம் நடத்திய வழக்கறிஞர்கள்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கச்சேரி சாலை பகுதியில் உள்ள அரசினர் தோட்ட வளாகத்தில் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் , வட்டாட்சியர் அலுவலகம், வணிக வரி அலுவலகம் காவல்துறை கட்டிடம் உள்ளிட்ட அனைத்து அரசு சார்ந்த அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. 

இந்த அலுவலகங்களுக்கு செல்லும் நுழைவாயிலில் மற்றும் நீதிமன்ற வளாகத்தை சுற்றிலும் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது இதனால் நீதிமன்றத்திற்கு செல்லவும், வட்டாட்சியர் அலுவலகத்திற்கு செல்லவும் பொதுமக்கள் தேங்கியிருக்கும் தண்ணீரில் கடந்து செல்ல வேண்டிய அவல நிலை நீடித்து வருகிறது.

மழைநீரை அகற்ற கோரி பலமுறை பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கும், நகராட்சி நிர்வாகத்திற்கும் வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் இன்று நீதிமன்றத்தை புறக்கணித்து மழைநீரை அகற்ற கோரி வழக்கறிஞர்கள் தேங்கி இருக்கும் மழை நீரில் காகிதத்தில் கப்பலை விட்டு நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் 25 ஆண்டுகளாக வழக்கறிஞர்கள் கோரிக்கையான ஒருங்கிணைந்த  நீதிமன்ற வளாகம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்ற கோரி தொடர்ந்து ஒரு வாரம் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட போவதாக வழக்கறிஞர்  வாணியம்பாடி பார் அசோசயேஷன் அறிவித்துள்ளது.

Tags:    

Similar News