இறந்தவர் பெயரில் ஆள்மாறாட்டம்: குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க புகார்

இறந்தவர் பெயரில் ஆள்மாறாட்டம் செய்த நிலமோசடி குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க பாதிக்கப்பட்டவரின் மகன் சார்பதிவாளரிடம் புகார்

Update: 2021-07-26 12:00 GMT

இறந்த தனது தாயார் பெயரில் ஆள்மாறாட்டம் செய்த நில மோசடி குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க பாதிக்கப்பட்டவரின் மகன் சார்பதிவாளரிடம் புகார்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி, நியூடவுன்  ஜீவாநகர் பகுதியில் வசித்து வருபவர் வஜ்ஜிரம்பிள்ளை. இவரது மகன்  ஜெயராகவன் வாணியம்பாடி சார்பதிவாளர் உமாபதியிடம் புகார்மனு ஒன்றினை அளித்துள்ளார்.

அதில், தனது தாயார் டி.கே.பேபி அம்மாள் என்பவர் கடந்த மே மாதம் 12ம் தேதியில் காலமாகி விட்டதாகவும், தனது தாயார் பேபிஅம்மாள் பேரில் உள்ள நிலமானது வாணியம்பாடி அடுத்த பெத்தகல்லுப்பள்ளி கிராமத்தில் 3.4.5ஹெக்டேர் பரப்பளவு நிலம் உள்ளதாகவும் கூறியுள்ளார்.

இந்த பட்டாநிலத்தை மர்மநபர்கள் சிலர் ஆள்மாறாட்டம் செய்து கடந்த 20ஆம் தேதியில் போலியான பேபி அம்மாள் என்பவர் மூலம் அஹமத்பாஷா என்பவருக்கு 1ஏக்கர் 85செண்ட் நிலத்தை பொது அதிகார ஆவணம் செய்து கொடுத்ததாகவும், பத்திரப்பதிவு வாணியம்பாடி சார்பதிவகத்தில் வைத்து பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த பத்திரத்தை மையமாக வைத்து கடந்த 23ம்தேதியில், போலியான நபரிடம் ஆவணம் பெற்ற நபர், சுஜாதா என்பவருக்கு கிரையம் செய்து கொடுத்துள்ளதாக வில்லங்க சான்றில் பதிவு தோன்றுகிறது. எனவே, இறந்து போன தனது தாயார் பேபியின் பெயரை பயன்படுத்தி, நிலமோசடி செய்துள்ளனர் என்பது தெளிவாகிறது. இந்த மோசடி நபர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், பதிவான பத்திரங்களை ரத்துசெய்யவும், பத்திரம் தயாரித்த பத்திர எழுத்தர் மற்றும் உரிய அதிகாரிகள் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டியும் புகார் மனுவை அளித்துள்ளார்.

வாணியம்பாடியில் இறந்துபோன நபர், சார்பதிவாளர் அலுவலகம் வந்து, தனது சொத்தினை பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ளதாக நடந்துள்ள இந்த சம்பவம் பெருத்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News