வாணியம்பாடியில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்

பொதுத்துறை சொத்துக்களை தனியாருக்கு தாரை வார்க்க முயலும் மத்திய அரசை கண்டித்து வாணியம்பாடியில் காங்கிரஸ் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்

Update: 2021-08-27 15:25 GMT

வாணியம்பாடியில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தியது

இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகஸ்ட் 23ஆம் தேதி டெல்லியில் அறிவிப்பு ஒன்று வெளியிட்டார். அதன்படி அடுத்த 4 ஆண்டுகளில் மத்திய அரசுக்குச் சொந்தமாகவும் பொதுத்துறை நிறுவனங்கள் வசமும் உள்ள 6 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் அடுத்த 25 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடப்படவுள்ளன.

இதில் சாலைகள், ரயில்வே, துறைமுகங்கள், விமான நிலையங்கள் உள்ளடங்கிய போக்குவரத்துக் கட்டமைப்புகள், மின் உற்பத்தி நிலையங்கள், மின் பாதைகள், குழாய் பாதைகள், நிலங்கள், கட்டடங்கள் ஆகியவை இந்தத் திட்டத்தின் கீழ் கொண்டுவரப்படும். தனியாரிடம் அளிக்கப்படவுள்ள சொத்துகளில் 66 சதவீதம் சாலைகள், ரயில்வே, மின்சாரத் துறையைச் சேர்ந்ததாக இருக்கும். மீதமுள்ள 34 சதவீதம், விமான நிலையங்கள், சேமிப்புக் கிடங்குகள், துறைமுகங்கள் போன்றவையாக இருக்கும் என்று அறிவித்திருந்தார்.

அதனை தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகே தேசத்தின் பொதுத்துறை சொத்துக்களை தனியாருக்கு  தாரை வார்க்க முயலும் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியின் திருப்பத்தூர் மாவட்ட தலைவர் பிரபு தலைமையில் கண்டன கோஷங்கள் எழுப்பியவாறு காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் உள்ள காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் என 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் 

Tags:    

Similar News